Sunday, December 29, 2013

வழியெங்கும் மனிதர்கள்

வருந்தி அழைக்கும் குரல்.
விரும்பி செல்லும் பயணம்.
வழியெங்கும் மனிதர்கள்.
அக்காவின் அகவையொத்த
தமக்கையை தரிசித்த பூரிப்பு.
எப்போதோ கண்ட தோழியை
வெளிச்சமிட்ட மெர்க்குரி விளக்கு.
மனித கூட்டத்திற்குள் தனித்தோடும் நாய்.
போஸ்டர் உரிக்கும் மாடுகள்.
இருப்பை முழம் போட்டுத்தீர்க்க அலையும்
பூக்காரியின் கண்கள்.
அழகாய் மட்டும் குறுக்கிட்ட ஒரு தேவதை.
காதலியாய் தேட இடைமறித்த மூளை அணுக்கள்.
தந்தையின் தோளில்
பனிக்குல்லா குழந்தையின் கண்ணம்.
நரைத்துப் பழுத்த கணக்கு வாத்தியாரின் தலை.
இன்னுமா இருக்கிறான்...!!
என்று ஆச்சர்யத்தில் உறையவைத்த மனிதர்கள்.
பேத்தியின் கைப்பிடிக்குள் பத்திரமாய்
கடக்கப்பட்ட அகண்ட சாலை.
வெறிச்சோடிக் கிடந்த சாயங்கால சந்தை.
விளக்குகளால் நிறைந்த ஊட்டி ஃபிரெஷ் கடைகள்.
அவ்வப்போது தரிசித்துக் கடந்த ஆலயங்கள்.
குறுக்கிட்டு மரித்த ஆஞ்சநேயருக்கு மட்டும் அர்ச்சனை.
காணிக்கைக்காக எறிந்த சூடத்தட்டில் அர்ச்சகரின் கண்கள்.
அவ்வப்போது தங்கும் இடம்.
எப்போதும் கிடைக்கும் பாசம்.
அடங்க மறுத்த சிரிப்பொலிகள்.
புதிய உணவு... புதிய சிந்தனை.
புதிய உறக்கம்... புதிய கனவு
புதிய விடியல்... நிறைய புரிதல்கள்
திரும்பச்சொல்லும் (செல்லும்) மனநிலை
விட மறுத்த கட்டளைகள்.
திரும்ப வேண்டிய கட்டாயங்கள்
வழியெங்கும் மனிதர்கள்.

..................................................

........................................

........................

Wednesday, December 11, 2013

கனவில் பூத்த கள்ளிச் செடிகள்!!

நான் உறங்கிச் செலவழித்த

என் முந்தைய இரவுகளில் பூத்த கனவுகளில்

கள்ளிச்செடிகளும் பூத்திருக்கிறது

இப்பொழுதும் எப்போதாவது பூக்கிறது

ஒவ்வொரு முறையும் அதை

வெட்டி வீசியும் பார்த்துவிட்டேன்

விதை ஏதுமில்லை ... வேரும் மீதமில்லை

எப்படியோ பூத்து விடுகிறது .

இருள் கப்பிக்கொண்டு இமை ஆயாசம் கொள்ளும்

ஒவ்வொரு பொழுதுகளிலும்

களைவாள் தீட்டிக்கொண்டே இருக்கிறேன் .

Saturday, December 7, 2013

தரப்படுத்திக் கொள்ளும் கலையறிதல்

உன் இருப்புகளை யெல்லாம் கட்டிக்கொண்டு
பயணக் குதிரையில் ஏறிவிட்டாய்.

ஆசீர்வதிக்கப்பட்ட இறுமாப்பில்
உன் பயணத்தின் மீது உனக்குமே நம்பிக்கையிருக்கிறது.

இடையில் பின்னப்படும்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிய
கூர்மழுங்கா கத்தியொன்றையும்
தாங்கியிருக்கிறது உன் இடுப்பு.

வேகம் குறையாமல்
சீராய் பாய்ந்து தாக்கும்
துப்பாக்கி ரவைகள் பற்றி
எந்த முன்னேற்பாடுகளும்
உனக்குள் இல்லை.

உன் பாதைகளில் பதிக்கப் பட்டிருக்கும்
கண்ணிவெடிகளை மோப்பம் பிடிக்கும் ஆற்றல்
உன் குதிரையிடம் இல்லை.

உன் இருப்புகளை அவிழ்த்துவிடும்
தருணங்களிலெல்லாம்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிந்து
உன் இருப்பின் எடை கூட்டிக் கொள்கிறாய்.

உன் இடுப்பில் தொங்கும்
கத்தியின் முனை மழுங்கிவிட்டதாக
எண்ணிக் கொண்டிருக்கும்போதே
உன் இருப்பின் கணம் கூடிவிட்டதாக
உணர்கிறாய்.

சுமந்துபோக குதிரை இருக்கிறது என்றபோதிலும்
துப்பாக்கி ரவைகளைப் பற்றியும்
கண்ணிவெடிகள் பற்றியும்
சிந்திக்கத் துவங்கியிருக்கிறாய்.

செயலற்ற செயல்

எப்போதும் போலவே கடந்துபோகும் நாளொன்றை
எனக்கான நாளாக தீர்மானம் கொண்டு
வாழ்த்துக்களால் இட்டு நிரப்புகிறாய்.

என் பசியின் வலி புரட்டி வீசும் வார்த்தைகளை
உன் காதுகளுக்குள் செலுத்தவிடாமல்
உன் அலைபேசியின் எதிர் உரையாடலுக்கு
பதிலளித்துப் போகிறாய்.

என் மூளை நரம்புகள் ரத்தம் கசிந்து
உறைந்து கிடந்தபோது
உன் பிரார்த்தனை கூச்சல்களை
என் செவிப்பறை ஏற்க மறுத்து இடைநிறுத்துகிறது.

எவ்வித முன்னேற் பாடுகளுமின்றி
என் பூதஉடல் பிரிந்த உயிர் பற்றி
சற்றே சோர்வுற்றிருப்பாய்.

பாவம் நீ...

என் சிதைக்கு மேல் சீராக அடுக்கப் பட்டிருக்கும்
காட்டு மரக்கட்டைகள் கருகிச் சரியும் போது.
உன் ஆழ்ந்த இரங்கலை சொல்லிவிட்டுப்போ...

உணர்தல்

நீள்வட்ட காட்டுப் பாதைக்குள்
ஆயுதங்கள் ஏதுமின்றி சுற்றித் திரிகிறாய்.

உன் இலக்கின் நீள்வெளி இன்னும் உனக்கு
தெரியாததாயிருக்கிறது.

கர்ஜிக்கும் குரல்களை நீ
மொழிபெயர்த்துக் கொள்ள மறுக்கிறாய்.

சிறுத்தைகளின் வேகம் உணராமல்
உன் நடையின் வேகம் கூட்டிக் கொள்ள மறுக்கிறாய்.

கூர் கொம்புகளுடன் உனைத் துரத்தும்
காண்ட மிருகக் கூட்டங்களை
ச்சூ எனக் கையசைத்து விரட்டிவிட முனைகிறாய்.

உன் பாதையில் கிடக்கும் இலைச் சருகுகளின் அசைவு
கருநாகம் தொடர்வதைப்போல் நீ உணரும்போது
உன் இலக்கின் அடையாளம் தென்படுவதான மாயையில்
உன் கால்கள் சற்றே வேகமெடுக்கிறது.

Friday, December 6, 2013

2013 டிசம்பர் facebook ல்

,,,

நிலாவைப் பற்றி முனியம்மாவின் கவிதை

















ஒப்புவமையிலாஅழகுப் பெண்
இரவுகளுக்கு சொந்தக்காரி
நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்
கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
இவளின்றி அமையாது கவிதை .

Wednesday, December 4, 2013

யாரோ பேசிக்கொண்டது

அவள் : என்னுள் ஊடுருவிட்ட - உன் நினைவுகளால் - நிதமும் நான்
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்.
நீயே வந்து சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை.

அவன் : உன்னுள் ஊடுருவிட்ட என் நினைவுகள் உன்னை நிதமும்
கிறுக்கச் சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.


அவள் : கடிகார முள்துலைத்து...
இந்த நிசப்தங்களைக் கடந்து...
மௌனங்களுடே பேசிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான நான் இங்கே...!!

அவன் : மௌனங்களுடன் எனக்கான நீ மெளனமாக பேசிக் கொண்டிருந்தாலும்...
உன் மௌனத்தை நான் இங்கே மெளனமாக கலைக்கச்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


அவள் : உன்னை நினைத்தொரு கவிதை எழுதவும் முடியாதொரு வறுமைக் கோட்டுக்குள்
இன்னமும் நான்...!!
மன்னித்துவிடு.

அவன் : என் அன்பையே என் அனுமதியில்லாமல் முழுமையாக களவாடிக் கொண்டவள் நீ...
இருந்தும் ஏன் அந்த வறுமைக் கோட்டுக்குள் நீ...?


அவள் : எப்போதும்,
முரண்பட்டே நிற்கும்
உன்-வார்த்தைகளுக்குள்
முற்றுப்பெறாமலே
முடிந்து போகிறது...
என்-ஒவ்வொரு இரவுகளும்...!!

அவன் : முற்றுப்பெறாத இரவுகள், ஜென்மங்களைக் கடந்ததென்றும், கடக்குமென்றும்
நீ அறிந்தது தானே...


அவள் : என் வாழ்க்கைப் புத்தகத்தின் முகவுரையும், முடிவுரையும்
நீயே எழுதிவிட்டு போ...!! pls.

அவன் : முகவுரை எழுதத்தான் எண்ணுகிறேன்...
முடிவுரை இல்லாமல்...
சாத்தியம் இல்லை தான் . இருப்பினும் உன் வாழ்கை புத்தகத்தை என்னிடம் தந்துவிடு... பத்திரமாய் இருக்கட்டும்.


அவள் : காதலில்லை என்றுசொல்லும் உனதருமை முட்டாள் பெண்ணிற்கு ...
உனக்கே உரிய பாசையில் எல்லாவற்றையும் காதலிக்கக் கற்றுக்கொடு ..plss !!

அவன் : என் நட்பை உன் நட்பிற்கு காதலிக்க கற்றுக்கொடுத்த எனக்கு...
எனதருமை முட்டாள் பெண்ணின் நட்பை. என் நட்பிற்கு,
உன் பாஷையில் கற்றுக்கொடடி பெண்ணே...


அவள் : நான் விழித்தும் ...நீ தூங்கியும் கொண்டிருப்பதால் -நம் காதல்
நிமிசமொருமுறை தூங்கி விழித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

அவன் : நீ விழித்திருந்தாலும்
நான் தூங்கிக்கொண்டிருப்பதாக நீ நினைத்திருந்தாலும்.
என் நினைவு மட்டும் நட்பாய், காதலாய் உயிர்த்திருக்கும்
நீ விழித்திருப்பது போலவே !!


அவள் : அழகான உன் சிரிப்புக்கள் நடுவே ...எதாச்சும் அர்த்தப்படுத்தி
விழித்தபடி கனவு கொள்ளும் என் முட்டாள் விழிகள் ..!!

அவன் : உன் முட்டாள் விழிகளின் உண்மை புரியாமல் நீ ஏன் பிதற்றுகிறாய் .


அவள் : எதுவும் எனக்கிங்கு புதிதில்லை ...
எல்லா வலிகளும் எனக்கே ...
எனக்கு மட்டுமே.. !!

அவன் : உன் வலிகளுக்கு மருந்தாய் நானிருக்க...
உன்னின் மித மிஞ்சிய வலியை என்னுள் பாய்ச்சிவிடும் உரிமை உனக்கிருக்க....
எப்படி எல்லா வலிகளும் உனக்கு மட்டும் சொந்தமாகும்...?
எனக்கும் தான் சொந்தம் .


அவள் : பொய்யென்று ஏதும் எனக்குள்ளில்லை...
மெய்யென்று எதுவும் .. - நீ எனக்குள் தேட ..!!

அவன் : மெய்யாய் நீ கண்டு பிடித்தவன் நான்...
அப்படியிருக்க பொய் எப்படி உனக்குள்ளிருக்கும் ...?


அவள் : காத்திருந்து...
காக்கவைத்து ...
உனக்குள் தொலைந்து விடுவதும் ஒரு சுகம் தான் ..!!

அவன் : எனக்காக நீ காத்திருந்து ...
உன்னை நான் காக்கவைப்பதினால்...
நீ அடையும் சுகத்தை மட்டும் நான் விரும்பாமல் போனாலும்.
எனக்குள் மட்டும் நீ தொலைந்து விடுவது பிடித்திருக்கிறதெனக்கு.


அவள் : என் கிறுக்கல்கள் உங்கள் கவிதைகளை
காதலிப்பதாய் ஒரு சேதி ...
எவ்வளவு தூரம் உண்மை.

அவன் : உன்னைப் போலவே முற்றிலும் உண்மை .


அவள் : ஆழ்ந்து அனுபவித்துத் தான் வருவது - காதலென்றால் ...
எனக்கும் இப்போது அதே நிலை தான்...!!!

அவன் : யாரால் உனக்கு அந்த நிலை ? ஏன் ?


அவள் : சிரிக்கிறாள்.
எனக்குள் நான் ஆழ்ந்து ...
என்னையே நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்
என்னுள் நீ இருப்பதால் தானோ?

அவன் : இதிலென்ன சந்தேகம் உனக்கு ?


அவள் : கிறுக்கிக்கொண்டே தான் இருக்கிறேன் ...
என்றாவது ஒருநாள் கவிதையாகாதா என்ற நப்பாசையில் ..!!!

அவன் : கிறுக்கல் தான் காவியமடி பெண்ணே ...
கிறுக்குவதை நிறுத்தாதே.
உன் கிறுக்கலில் தான் என் கவிதையே உயிர் வாழ்கிறது .


அவள் : எதைத்தான் பிடிக்காது இப்போ ?
உன்னைப்பிடித்த பின்பு .
எல்லாமே பிடித்துப்போகிறது.

அவன் : என்னையே பிடித்துபோய்விட்ட உனக்கு
எல்லாமும் பிடிக்கத்தானே செய்யும் ?


அவள் : நான் ஒரு மின்னல் ஆகிறேன் ...
உன் பார்வைகள் என்னுள் இடியென இறங்குவதால்.

அவன் : உன் மின்னலில் தான் நானும் மின்னுகிறேன்.


அவள் : நான் மின்னல் என்றால்
என் மின்னல்களின் வெளிச்சம் நீ ...

அவன் : ஆமாம் ...
இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.....
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.


அவள் : அவனைப் பார்க்கிறாள்.
அவன் : பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்.


அவள் : உன்- நிராகரிப்புக்களினுடே .. உயிர் விட்டமுதற் பூ -விது ...
அவன் : மெலிதாய் சிரிக்கிறான்.


அவள் : மீண்டும் - உன் பொய்யான ஏற்றுக்கொள்ளளில் கருக்கிவிடாதே..plss .

அவன் : போன ஜென்மத்தில் என் உயிர் விட்டும் கூட
என்னால் உன்னை நிராகரிக்கமுடியவில்லையே ....
அப்படியிருக்க எப்படி என் ஏற்றுக்கொள்ளல்
உனக்கு பொய்யானதாகப்பட்டது ?


அவள் : வலிமிகுந்த இந்த நிமிடங்கள்.
நொடிப்பொழுதில் கடந்து போகக்கூடும்...
நீ...........நீயாக என்னிடம் பேசும் போது மட்டுமே...!!

அவன் : நிமிடத்திற்கு நிமிடம் நான் உன்னுடனேயே பேசவேண்டும் என்று நீ விரும்புவதையே.... நானும் விரும்புகிறேன் .
ஆனால் காலம் தான் சதி செய்கிறது என்ன செய்ய ?


அவள் : மனதோடு மனம் சண்டையிட்டு
நேரில் பேசக் கேட்கும் .
நேரில் பேசக் கேட்கும் போது...
மீண்டும் சண்டை போடக் கூடுமோ ...?

அவன் : அப்படிக்கேட்டால் உன் மனதை நானும்
என் மனதை நீயும் சமாதாப்படுத்திவிடுவோம் ......


அவள் : நீ இல்லையென்று மறுதலிக்கும் ஓசையெல்லாம்
எனக்குள் ' ஆமென்றே'' ஒலிக்கிறது ...!!
எனக்கேதுமில்லை... நீ அப்படியேயிரு...!!

அவன் : இல்லையென்று சொல்ல எனக்குள் ஏதுமில்லை....
எல்லாம் உன்னிடமே இப்பொழுது.


அவள் : இடியென எல்லாவற்றையும் என்னுள் இறக்கிவிட்டு
இரக்கமற்று அங்கே நீ ...!!
இங்கே நானொரு மழைக்கால மேகமாய் .
நிதமும்,கண்ணீருக்குள் தொலைந்தே போகிறேன் ...!!!

அவன் : மின்னலாய் கூட காண முடியாத தூரத்தில் அங்கே நீ ..!!
மழைக்கால மேதுமில்லை இங்கே.... விழிநீர் மழை வெள்ளமாய் கரைபுரல்கிறது.


அவள் : நான்... நீ ....நாமிருவராகி ...செய்த முதல் தப்பு காதலகிற்று ...!!!
அவன் : ஆகிவிட்டு போகட்டும்விடு ....
இதுதான் காதலென்று நாமும் கற்றுக்கொண்டோமே...


அவள் : தெரிந்து தெளிவாய் குழப்பிய குழப்பத்தில் நீ...
குழப்பத்தின் தெளிவில் நான் ...!!!!

அவன் : ஆமாம் ........இப்பொழுது நானும் தெழிந்தவனாய் உன்னில் .


அவள் : நம்மை அழித்து விடுவார்களோ...?
அவன் : அழியாத பக்கங்கள் நாம் .


அவள் : உங்கள் திறமைகளைக் கண்டே நீள்கிறது எனது ஆச்சர்யங்கள்.
அவன் : நீ பிரசவிக்கும் வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கிறது என் திறமை...
உன்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும் ஆச்சர்யக்குறியாய் இருந்துவிட்டுப் போகிறேனே.....!!!


அவள் : நீ யார் ?
அவன் : நான் ....
நான் மட்டுமல்ல .....நீயும் கலந்தவன் .


அவள் : யாருமே நுழையமுடியாதபடி பூட்டி வைத்த - என்மனக்கதவின் ...
எந்த வழி நீ நுழைந்தாய் ..?
இன்னும் அதே மயக்கத்தில் நான் ..!!!

அவன் : போன ஜென்மத்தில் நீ என்னிடம் கொடுத்து சென்றிருந்த
கவிதை எனும் சாவியால் திறந்து நுழைந்தது உனக்கு தெரியாதா ...!!!
மயங்கடி பெண்ணே ....என்னால் மட்டுமே நீ மயங்கவேண்டும் .


அவள்: நான் வைத்துக்கொண்டு இல்லையென்றால் உனக்குப்பிடிக்கிறது ...
நீ இல்லையென்று வைத்துக்கொண்டால் எனக்குப் பிடிகிறது ..!!

அவன் : நீ வைத்துக்கொண்டு இல்லையென்றே சொல் ...
நானும் இல்லையென்றே வைத்துக்கொள்கிறேன் ...
நன்றி மட்டும் உனக்கு .


அவள் : நீங்கள் யார் ? எங்கிருந்து வந்தீங்க ?
அவன் : உன்னிலிருந்து தான் ... ஏன் உனக்கு தெரியாதா ?


அவள் : சிரிக்கிறாள்.
அவன் : உன் ஒற்றை சிரிப்பை மட்டுமே பதிலாய் அளிக்கிறபோதிலும் எனக்குள் கவிதை விந்தை பாய்ச்சுகிறாயே.....!!!


அவள் : மறுபடியும் சிரிக்கிறாள். வார்த்தைகள் வரமறுக்கும் தருணங்களில் ...இந்த சிரிப்புக்கள் மட்டுமே எனக்கு கை கொடுக்கின்றன ...tnx for சிரிப்புக்கள் .

அவன் : சிரிக்கிறான்.


அவள் : ஆச்சரியங்களினுடே தொடர்ந்து செல்லும் நம் ஒவ்வொரு நகர்வுகளும் .....நகரட்டுமே விட்டுவிடுகள்.

அவன் : ஆமாம் நான் அப்படித்தான் விட்டுவிடப்போகிறேன் .


அவள்: மௌனியாயிருக்கிறாள்.

அவன் : நீ என்னுடன் பேசாத நேரங்களில் கூட நான் மட்டும் உன்னுடன் பேசிக்கொண்டுதானிருப்பேன்...
என்னால் மட்டும் முடியும் ....
உன்னுடன் மட்டும் அப்படி பேச .
உன்னை போலவே எனக்கு இப்பொழு வார்த்தைகள் வரமறுக்கிறது ...


அவள் : விருப்பு வெறுப்புக்கள் ஊடே
பிடிவாதங்களும்.. லட்சியங்களும் மென
மூட்டை கட்டிவைத்துவிட்டு ...
கனவுகளைச் சுமந்தபடி
நகரமறுக்கும் என் நாட்கள் ...

அவன் : உன் பிடிவாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு.... என் கனவுகளுடன் பயணிக்க புறப்படடி பெண்ணே...என் கனவுகளுடன் உன் கனவுகளையும் சேர்த்தே சுமக்கிறேன்.


அவள் : தோல்வியில்லா காதல் வேண்டும்..
தோற்றாலும்....
தோல்வியிலா உன் நினைவுகள் என்றென்றும் வேண்டும்.!!

அவன் : தோல்வியே இல்லாத காதல் தான் இது ...அப்படியே தோற்றாலும் சேர்ந்து வாழ்தல் தான் காதலில் வெற்றியா....? பிரிந்து படுதலும் காதலில் வெற்றி தானடி பெண்ணே.


அவள் : முற்றுப் புள்ளியிட்டு முடித்துவிட முடியவில்லை...
அப்படியும் இருக்குமோ? ....? இல்லைக்
காலத்தே இழுத்துச் சென்று...
கண்ணீரில் முடித்துவிடவும்... நினைக்குமோ?

அவன் : முற்றுப்புள்ளியிட்டு முடித்துவிடமுடியாததுதான்...
காலத்தே இழுத்து சென்று கண்ணீரில் முடிந்து போனால் போகட்டும் விடு.


அவள்: காற்றில்லா சுவாசம் எப்படி நிகழும் ?
கண்ணீர் இல்லாக் காதல்....??
கண்ணீர் இல்லாக் காதலைக் கற்றுக்கொடுங்கள்...!!!

அவன் : காற்றே தேவை இல்லை !!
உன்னை நானும், என்னை நீயும் சுவாசிப்பதால்....
கண்ணீர் இல்லாக்காதலை நான் உனக்கு
கற்றுக்கொடுத்துவிட்டேன் .


அவள்: உன்னைக் கவியெழுத ...
ஆயிரம் சொற்க்களுடே அணிவகுத்து ..
கவி வகுத்து களைத்தாயிற்று...
எதுவும் உனக்கு உவமையற்று..தோற்றே போகிறது.
முடிவில்லா இப்பயணம்.
முடிந்தவரை
என் அன்பை உன்னிடமே விட்டுச் செல்லட்டும்..!!
காலங்கள் அத்தனையும் உணர்த்தட்டும்
உனக்கே உரியவையாய்..!!!

அவன் : அணிவகுத்த ஆயிரம் சொற்களுக்கும் ...
கவி வகுத்து களைத்த உன்னையும் ..
வணங்கி வெண்சாமரம் வீசாமல் போவேனோ ...?
எனக்கான உவமையாய் உன்னைப் பொருத்திப் பார் ...
நீ மட்டும் தோற்று போகமாட்டாய் ...
நாமிருவரும் வென்றே இருப்போம் .
என் அன்பையும் , நன்றியையும் அன்றி
உனக்கு தர என்னிடம் வேறேதுமில்லை .


அவள் : வாழ்கையில் எல்லாமே கடந்தாயிற்று ...
காதல் ஒன்றைத்தவிர...
அடிக்கடி நீச்சலிட்டு தோற்றுபோவதும் இங்கே தான்..!!!

அவன் : காதலில் மட்டும் நீ நீச்சலிட்டு தோற்று போவதையே நான் விரும்புகிறேன் .
இந்த இடத்தில் மட்டும் நான் சுயநலவாதி என்பதில் எனக்கு தாழ்வேதும் இல்லை ....


அவள்: காதலும் கற்று மற...
அவன்:  மறந்துவிட்டால் காதலில்லை ...


அவள் : காலம் எனக்கு வாழ்வு தந்தால்...
என் உணர்வு முழுக்க நேசித்து காதல் செய்வேன்...

அவன் : என் உணர்வை உன் உணர்வு நேசிக்க காலம் கண்டிப்பாக நமக்கு வாழ்வு தரும்
ஆகையால் காதலி .


அவள்: எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது வாழ்கையே வெறுத்துப் போகும் ...
நிதானப் படுத்திக்கொள்ள ..சில உண்மைகளையே நாடிச் செல்லும் மனம்...
என்னையே நான் தேடி கொண்டு தான் இருக்கிறேன் .

அவன்: என்னில் தொலைத்துவிட்ட உன்னை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாய்...
உன் எதிர்பார்ப்புகளை அர்த்தமுள்ளதாக்கிகொண்டு ...
வெறுத்துப்போகும் வாழ்கையை வெறுத்துவிடு.


அவள் : வாழ்கையை காதலிக்க தொடங்கும் போது வாழ்கையே முடிந்து விடும்..
அவன் : முடிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் ...


அவள்: கவிதைகளை காதலித்து ..
கணணி முன் கழியும் நாட்கள்...
கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ...
அழகு குறைந்தே போகிறதாம்..:
இனி வேண்டவே வேண்டாம் ..நிறுத்திவிடு!! ..
இது அம்மா..

அவன் : உன் அம்மாவிடம் சொல் ...
என்னவன் என்னை சுற்றியுள்ள கருப்பை வெளுக்கசெய்தவன் என்று .....
என்னை அழகாக்கியவனும் , அர்த்தமுள்ளவனாக்கியவனும் அவன்தானென்று.


அவள்: என் தனிமைப் பொழுதுகளை தாங்கி நிற்கும் - உன் நினைவுகள் ..
நினைவுகளுடே நிலைத்து நிற்கும் - என் சுகமான கனவுகள் ...!!!

அவன் : உன் தனிமை பொழுதுகளுடன் நான் உன்னுடன் கலந்திருப்பதை நீ அறியாமல் போனது ஏனோ ...?
உன் சுகமான கனவிற்கு காரணம் உன்னுடன் நான் கலந்திருப்பது தானோ...?


அவள் : என் வாழ் நாளின் இறுதி மணித்துளிகள்........
கணக்கிட்டு பார்த்துகொள்கிறேன்....................
.......................................................................
.......................................................................

அவன் : நீ கணக்கிடும் ஒவ்வொரு மனித்துளிகளுக்குள்ளும்
நானும் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாமல் உனது எண்ணிக்கையை தொடர் ...


அவள் : என்னை எழுதவைத்து ..காத்திருந்து பதில்களாய் வரும் நீ..
இன்றுமட்டும் காக்கவைத்து வரமறுப்பது ஏனோ?...!!!!!

அவன் : உன்னை எழுதவைப்பதற்க்காகவே நான் உன்னை காத்திருக்க வைத்திருப்பேனோ... ?
உன் எழுத்தில் தானே உன் ....சாரி ...சாரி... நம் எதிர் காலமே அடங்கி இருக்கிறது .


அவள் : எதிர் பார்க்காத வேளைகளில் என்னுள்
நீ கவிதையாகிறாய்.

அவன்: என் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் நீ கவிதையாய் ஒழிந்திருக்கிறாய்...
கவிதையாய் நாமிருவரும் பேசிக்கொண்டது பசுமையாய் இப்போதும்..... எப்போதும் .


அவள் : என் கல்லறைஎங்கும் - உன் கண்ணீரால் குளிப்பாட்டி ...
வெள்ளை ரோஜா மலர்கொண்டு - மணம் வீசி விட்டு போ...

அவன் : நாம் ஈருடல் தான்....
உயிர் ஒன்றே என்பதை நினைவு படுத்துகிறேன் உனக்கு...


அவள் : ஏய் சின்னப் பெண்ணே ,
என்னாச்சு உனக்கு ?
கரம் குவித்து ...
பூக்களுக்குள் முகம்புதைத்து ...
ஏன் அழுகிறாய்....??? okii
அழுது தீர்த்து விடு...

அவன் : மௌனமாய்.... ஆறுதல் வார்த்தைகள் தேடிக்கிடைக்காமல்...

Tuesday, December 3, 2013

நரகாசுரனின் ஆவி

கதை எழுதத்தூண்டியது : குமரேசன் அசாக் அய்யா அவர்கள் .
தலைப்பு உபயம் : ஈரோடு கதிர் அண்ணா அவர்கள் .
எழுதியது : : தரமான படைப்பாக வரவேண்டும் என்ற பீதியிலும் ,பேய் பீதியிலும் நான் .
(படைப்பு தரமானதா என்று தெரியவில்லை படித்துவிட்டு சொல்லுங்கள்)

பொதிமணலில் புதைந்து ஒய்யாரமாய் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள் நிரம்பிய காடு. அதைக்கடந்து சென்றால் மழைக்காலத்தில் மட்டும் கிளைகள் பிரித்தோடும் காட்டாறு (ஆறு ஒன்னு தான் தனித்தனியே ஆறுகள் ஓடுவது போல் இருக்கும் .ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடித்தனம் நடத்துவது போல்) . மற்ற நாட்களில் கானல் நீர் தவழ்ந்தோம் .

காட்டற்றின் பரந்த மணல் பரப்புகளில் ஆங்காங்கே வெட்டித் தோண்டப்பட்ட ஊற்றுக்கிணறு. வடு மூடிக்கொள்ளாமல் ஊற்றுக்கிணற்றில் ஊறிக்கிடக்கும் தண்ணீரைத்தான் குடிநீராக கொண்டுவந்து சேர்த்தாக வேண்டும் இராஜாமடம் என்ற கிராமத்து மக்கள் .

பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக மல்லிப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது .

மாண்புமிகு.முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் .இரா.வெங்கட் ராமன் அவர்கள் பிறந்த ஊர். 80 களின் கடைசியிலும் 90 களின் ஆரம்பத்திலும் இவர் பதவி வகித்தபோது இவரது தலையீட்டால் ஊர் முழுக்க குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுவிட்டது . இதை ஒரு அரசியல்வாதி செய்து கொடுத்திருந்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தச்சொல்லி இருப்பார்கள் .

முளைத்திருந்த பனைமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துவிட்டு அரசு பொறியியல் கல்லூரி ஒன்று தற்போது நடைமுறையில் .

சனி, ஞாயிறை ஒட்டிய திங்கட் கிழமையோ , வெள்ளிக்கிழமையோ பள்ளி விடுமுறை என்றால் தஞ்சாவூரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் தன் தந்தையை நச்சரித்துப் பிடுங்கி தன் தாய் வழி தாத்தா ,பாட்டி வீடான இராஜாமடத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான் குமார் .

இப்படித்தான் தன்னுடைய பத்தாவது வயதில் காலண்டுத்தேர்வு முடிந்த அன்றைய தினம் தாத்தா ,பாட்டி வீட்டிற்கு கிளம்பித்தயாராக இருந்தான் . தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தன்னுடைய தந்தை விடுப்பு எடுக்கமுடியாமல் தொடர் பணியில் ஈடுபட்டிருப்பட்டிருந்தார் .

மாலை 4 . 50 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து மீமிசல் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு டிரைவர் முத்தையாவிடம் தாத்தா பாட்டி வீட்டில் இறக்கிவிட்டுவிடும்படி பொறுப்பை ஒப்படைத்தார்..

அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் மீமிசல் செல்லும் பேருந்து நின்றால் அது குமாரின் தாத்தா பாட்டி வீட்டு வாசலாக இருந்திருந்தது . அப்படி வந்து இறங்கிக்கொண்டான் .

அன்றிரவே இவனது பாட்டி “முனியம்மா”, வேப்பமரம் குடைபிடித்திருக்கும் வாசலில் படுத்துக்கொண்டு குமாரின் தலையை நெருடிக்கொண்டே பலப்பல கதைகளுடன் ஒரு பேய்க்கதையும் சொல்லிவைத்தாள். கூடவே பணங்குட்டி, வாத்தியார்வீட்டு புளியமரம் ,பேய்மாடி பங்களா அத்துனை இடங்களுக்கும் போகக்கூடாது. போனால் பேய் பிடித்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, குமார் தூங்கியவுடன் பாட்டியிடம் , “ஏண்டி ..... அவன் லீவுக்கு தான வந்திருக்கான் ? அவன்கிட்ட போயி அங்க போகாத ..... இங்க போகாதன்னு சொன்னா .... எப்புடி அடுத்த லீவுக்கு வருவான் ?”

பாட்டி , “நீங்க சும்மாருங்க உங்களுக்கென்ன வேலைக்கி போய்டுவிங்க. நா சொன்னதெல்லாம் தூக்கிபோட்டுட்டு இந்த ராஜா பயலோட (குமாரின் கிராமத்து நண்பன்) சேந்துக்கிட்டு எல்லா எடத்துக்கும் போய்டுவான் . ஊராவூட்டு புள்ளைய அவங்க அப்பா, அம்மாகிட்ட ஒப்படைக்கிரவர உசுர கைல புடிச்சுக்கிட்டு தான் இருக்கணும்... நாளைலேருந்து ஏ.......... குமாரு ........ ஏ ................குமாரு.................... ன்னு அரை மணிக்கொருக்கா கத்திக்கிட்டே இருக்கணும் . எங்கயாச்சும் போயி மூக்கு மொவர அடிபட்டு வந்துட்டாலோ , பேய் பிசாசு புடிச்சு ஜுரம் வந்து கடந்தாலோ உங்க பொண்ணு கேப்பா , “என்னம்மா எம்புள்ளைய இப்புடி வுட்டுட்டுயேன்னு .”

நீ சொல்றதும் சரிதாண்டி என்ற முனகலுடன் மறுப்பேதும் சொல்லாமல் “பெரிய்......ய ஆளுதாண்டி நீ ...”என்று நமட்டாகவும், பெருமையாகவும் சிரித்துக்கொண்டார் தாத்தா .

அந்த விடுமுறையின் இறுதி நாட்களில் ஓடிக்கொண்டிருந்த குமாருக்கு அவனது தந்தை இறந்து விட்டதாக வந்த செய்தியை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் தஞ்சைக்கு அழைத்துச்சென்றார்கள் தத்தா, பாட்டி .

உயிர் விட்டிருந்த உடலை உட்காரவைத்து வாய் , கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதை குமார் முதன் முதலில் பார்த்தது தன்னுடைய தந்தையாகத்தான் இருந்தது . தன் தந்தையைச்சுற்றி கூட்டமாக யார் யாரோ ஏதேதோ சொல்லி அழுதது இவனையும் ஒருமுறை அழவைத்திருந்தது. அந்த வயதில் இறப்பு பற்றி அவனுக்கு அவ்வளவு தெரிந்திருக்கவில்லை . மூன்று வயது குழந்தையிடம் பேனாப்பிடித்து எழுதச்சொன்னால் எப்படி பேனா பிடிப்பதென்றே தெரியாமல் விழிக்குமோ அப்படி . அன்று மாலையே இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த தனது தந்தையின் உடலின் முன்னால் கொள்ளிச்சட்டி தூக்கிச்செல்ல இவனது தாயின் தங்கை கணவர், “அவன் சின்னப்பிள்ளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

தன்னை எங்கோ விட்டுச்செல்லப் போகிறார்கள் என்று நினைத்த குமார் , சித்தப்பா முறைவேண்டியவரிடம் , “சித்தப்பா நானும் வரேன்” என்கிறான் . வேறு பதில் சொல்லமுடியாதவராய் “வேண்டாம்ப்பா” என்று மட்டும் சொன்னார். பக்கத்திலிருக்கும் ஒருவர் “வேண்டாம் தம்பி அங்கெல்லாம் பேய் இருக்கும்” என்று சொல்ல அவன் முகம் மாறுகிறது . எதையோ தீவிரமாக யோசிக்கத்துவங்கிவிட்டான். தந்தையின் உடலை தூக்கிச்செல்வதைப்பார்த்து . தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்கிறான் .

“அப்பாவ இனிமேல் பாக்க முடியாதா ? வேண்டாம்ப்பா அங்க பேய் இருக்கும்ன்னு சொன்னாரே ஒரு மாமா ? அங்க தான் அப்பாவ தூக்கிட்டு போகப்போறாங்களா ? அன்னைக்கு ஒரு நாள் படிக்காம தெருவுல பசங்களோட ரொம்பநேரம் விளையாண்டுகிட்டு இருந்தப்போ அழைச்சுட்டு போய் coat stand டால அடிச்சி அழ வச்சிட்டோமேன்னு சமாதானப்படுத்த 6 -ம் நம்பர் பஸ்ல கூட்டிட்டு மெடிக்கல் காலேஜ் வர பேசிக்கிட்டே வந்து, பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஏதேதோ கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து திலகர் திடல் இருட்டில் கட்டிப்பிடித்து அழுதுட்டு “ஒன்னோட நல்லதுக்கு தாண்ட அப்பா உன்ன அடிச்சேன்”னு மன்னிப்புக் கேட்டாங்களே அந்த அப்பாவ இனிமேலே பாக்கமுடியாதா ?” தான் அடித்துக்கொன்ற தேள், பள்ளி, கரப்பான் பூச்சி இவைகளும் இப்படித்தானே உறவுகளை பிரிந்து அழுதிருக்கும். என்று அவனால் அல்ல. இன்று வரை நம் யாவரும் அலட்சியப்படுத்தும் விஷயம் .

வருடங்களும், வயதும் ஏறிக்கிடந்த நாளொன்றில் குமாரின் நண்பனான செந்தில், ஒரு நாள் நடு இரவு முற்றிக்கொண்டிருந்த நேரத்தில் மழைத்தூறலில் நனைந்துகொண்டே குமார் .. குமார்ன்னு கதவைத்தட்டி கிராமத்திலிருக்கும் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாக சொல்கிறான் . முகத்தில் தொற்றிக்கொண்ட பதர்ஷ்ட்டத்தையும், உறக்கத்தையும் , துடைத்துக்கொண்டு எப்படா என்கிறான் குமார்.

இப்பதான் ஃபோன் வந்துச்சி. சரி கிளம்பு போவோம் .

ந்தவந்துட்டேன் என்று கிளம்பி TVS 50 வண்டியை எடுத்துக்கொண்டு 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

லேசான மழை தூறிக்கொண்டே இருக்கிறது ,மரம், செடி, கொடிகள் அனைத்துக்கொண்டிருக்கிறது அந்த கிராமத்து சாலையை. ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவிலான சாலை அது. தூரத்தில் வலப்புறத்தில் ஏதோ அசைவதை குமார் பார்த்து நிதானமாக வண்டியை ஓட்டுகிறான் . குறிப்பிட்ட அந்த அசைவு உண்டான இடத்தில் ஒரு மாடு மேய்ந்துகொண்டிருக்கிறது.  இருவரும் திரும்பிப்பார்க்கின்றனர். மாட்டின் அருகில் வயதான பெரியவர் ஒருவர் சட்டை போடாமல் வேட்டிக்கட்டிக்கொண்டு தலையில் வெள்ளை நிற துண்டை முகம் முழுக்க மூடி இருக்கிறார். பீதியில் வண்டி பறக்கிறது .

தன் தந்தையின் இறப்பு குறித்த துக்கங்களை எல்லாம் மறந்திருந்த ஒருநாளில் குமார் செந்திலிடம் , “நைட் 2 மணிக்கு சட்டபோடாம வெள்ளத்துண்டால மூஞ்ச மூடிக்கிட்டு அதுவும் மழையில எந்த மடயண்டா மாடு மேய்ப்பான் . பேயாத்தாண்டா இருக்கும். நல்ல வேல உங்க அப்பாவோட சேர்ந்து நாமளும் போயிருப்போம்.”

“பேயாவது பிசாசாவது” என்று சொன்ன செந்தில் பின்னொருநாளில் தன்னுடைய வீட்டில் மாடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் . பொழுது போகாமல் எதேட்சையாக அவனது வீட்டிற்கு சென்ற குமாரின் கண்ணில் பாலகுமாரனின் "ஏழாவது காதல்" புத்தகம் படவே எடுத்து படிக்க ஆரம்பித்தவனுக்கு இரவு 11 மணி ஆகியிருந்தது தெரியவில்லை. வேறு புத்தகம் படித்துக்கொண்டிருந்த செந்தில் அதை முடித்துவிட்டு. “லைட்ட நிறுத்திட்டு இங்கேயே படுடா இந்த நேரத்துல போயி உங்கவீட்ல யாரையும் எழுப்பாம” என்று உரிமையோட சொல்லிட்டு படுத்து தூங்கிவிட்டான். "ஏழாவது காதலை" முடித்துவிட்ட குமார் லைட்ட நிறுத்திட்டு தூங்கிக்கொண்டிருந்தான் . எத்தனை மணி இருக்கும் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு டப்பா போல் கீழே விழுந்து ஓடுவது போல் இருந்தது. போர்வையை விலக்கி பார்த்த குமாருக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. மறுபடியும் போர்வையை முகத்தில் மூடிக்கொண்டு படுத்துவிடுகிறான். சற்று நேரத்தில் யாரோ திடு திடுவென ஓடும் சப்தம் கேட்கிறது . மாடிப்படியிலிருந்து ஏதோ விழும் சத்தமும் , ஐயோ... அம்மா... என்கிற சத்தமும் கேட்டு எழுந்து லைட்டை போட்டு பார்க்கிறான் குமார் . செந்திலை காணும் ! கீழிருந்த அவனின் வீட்டார்கள் விழித்து என்ன ஏது என்று பார்த்துக்கொண்டிருந்தனர் . “என்னாச்சி செந்தில்” என்று கேட்டவர்களிடம் செந்தில், “யாரோ என்ன தாண்டி போறாங்க , மேல ஏறி ஓடுறாங்க , போட்டு அமுக்குறாங்க” அப்புடின்னான். குமார் முகத்தில வேர்வ கொட்டுது.

மறுநாள் காலையில் கேள்விப்பட்டு செந்திலின் வீடுதேடி வந்து பார்க்க வந்த சரவணன் கிண்டலா சிரிச்சி சிரிச்சி வெறுப்பேத்திக்கிட்டு இருந்தான். அடுத்தநாள் சரவணனின் வீட்டில் எல்லோரும் ஊருக்கு சென்று விட அவனது பெரிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது என்று துணைக்கு குமாரைக்கூப்பிட்டான் . உள்புறமாக மாடிப்படிகொண்ட பெரிய வீடு அது . நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குமாரின் காலை யாரோ உதைத்து தள்ளுவது போல் உணர்ந்து எழுந்து பார்த்தான் . விடிவிளக்கின் ஒளியில் சரவணன் எங்கோ நடந்து செல்வது தெரிந்து குமார் சரவணனிடம் , “டேய்.. எங்கடா போற ? “ திரும்பிப் பார்த்து சரவணன், “டேய் தாத்தா மாடிப்படிலேருந்து தனியா எறங்கி வர்றார் கீழ அழைச்சுட்டு வரேன்”. எங்கடா என்கிறான் குமார். “அங்க பாரு குமார் வந்துகிட்டு இருக்காரு. கீழ உளுந்துட்டாருன்னா போய் சேர்ந்துடுவாருடா வுடுடான்னு மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான் அந்த இரவிலும். “டேய் உங்க தாத்தா செத்து போயி 7 மாசமாகிடுச்சிடான்னு சொன்னா கேட்க்.....கவே மாட்டேங்கிறான்.” ஒரு வழியா அவன உட்க்கார வச்சிட்டு . இருடா நான் அழைச்சுட்டு வந்து தூங்க வைக்கிறேன்னு குமார் சொன்னதுக்கப்புறம் தான் தூங்குனான் சரவணன்.

அடுத்தநாள் நண்பர்கள் மீட்டிங் ப்லேசான பாரி வீட்டில் சரவணனை நிக்கவச்சு கன்னாபின்னான்னு திட்டி.... ஓட்டி எடுத்துட்டு இருந்தான் பாரி . அப்பவும் புடிவாதமா சத்தியம் பண்ணி சொல்றான் சரவணன், “அது எங்க தாத்தா தான்னு .” நைசா பாரிக்கிட்ட போயி குமார் , “என்ன பாரி ராத்திரில தூக்கத்துல தான் அப்புடி பண்ணான்னு நினைச்சேன் இப்பவும் எங்க தாத்தா தான் அதுன்னு இப்புடி அடிச்சி பேசுறான் . ஒரு வேல பேயாத்தான் வந்திருக்காரா அவங்க தாத்தா ? “ பாரி குமார ஏளனமா பார்த்து “ஏன் உனக்கு என்னாச்சி ? நீ நல்லாத்தானே இருந்தே” . “சரி பாரி , விடு ......விடு ......... எனக்கென்னமோ இன்னிக்கு அவன தனியா படுக்க வைக்கவேணாம்னு தோணுது. உங்கவீட்டு மாடிய சுத்தம் பண்ணிவை நானும் வரேன் பய ஒரு மாதிரி தாத்தா நினப்புல பீதியாகி இருக்கான்”. அன்றைய இரவு பாரிவீட்டின் மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் பாரி, சரவணன், குமார் மூவரும் . கடிகாரத்தின் நொடி முள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது . திடீரென பாரி இரண்டாவது முறையாக அம்மா.... அம்மா....ன்னு கூப்டது கேட்ட குமார் விழித்து ஏதும் பேசாதவனாய் படுத்திருந்தான். கொஞ்சம் பயத்தில் . கீழிருந்து என்னப்பான்னு கேட்ட அவங்க அம்மாவிடம், “ஒண்ணுல்ல .... ஒண்ணுல்ல ... யாரும் வராதிங்க அங்கேயே இருங்க”ன்னு சொல்லிட்டு படுத்துவிட்டான் . மறுநாள் பாரியிடம் குமார், “ஏண்டா பாரி நேத்து நைட் அம்மாவ ரெண்டுவாட்டி கூப்ட ? “ சரவணனை கிண்டலடித்த பாரி சொல்லத்தயங்கினாலும் “ஒண்ணுமில்ல மாப்பி (மாப்ள) படுத்திருந்தனா.... ஒரு லேடி என்ன தாண்டி தாண்டி போகுது . காலால மிதிக்கிது அப்படின்னுட்டு இனிமேல் மாடில படுக்கலப்பா......”அப்டின்னதும் குமார் ஜுரத்தில் படுத்துட்டான் . ஜுரத்துல இருந்தவன பாக்க வந்த ரகு, “லே ...... இதுக்கு டாக்டர் , ஊசி, மாத்திரையெல்லாம் வேலைசெய்யாது பேசாம என்னோட வா கீழவாசல் தாண்டி கொசக்கரம்பைல போயி மந்திரிச்சுட்டு வந்துருவோம்” என்றான் . இருவரும் சைக்கிளில் செல்கிறார்கள் .

சைக்கிள் கீழவாசலை தாண்டியதும் இரண்டுபுறமும் வயல்கள் முளைத்துக் கிடந்தது. ஒரு இடத்தில் சைக்கிள் பஞ்சர் ஆனதும் என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருந்த ரெண்டுபேரையும் பார்த்து வண்டியில் போயிக்கொண்டிருந்த ஒருவர், “தம்பி இந்த இடத்தில் ரொம்பநேரம் நிக்காதிங்க . இது நடமாட்டம் உள்ள இடம்” என்றதும் சைக்கிளை தள்ளிக்கொண்டே ஓட்டம் பிடித்தவர்கள் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் வந்துதான் நின்றார்கள்.

தொடர்ந்து பேய் பீதியில் இருந்த குமார், தீபாவளி முடிஞ்ச ஒரு நாளின் இரவில் விஜய் டிவி யில் நடந்தது என்ன பார்த்துகொண்டிருந்தான். அதில் பேய் பற்றிய செய்தியை ஒருவர் திகிலூட்டும் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் அந்த காட்சிகளும், குரலும் சற்று பயமாகவே இருந்தது. இடையில் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறவரான விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவிகள் கட்டாயம் இருக்கிறது என்று முடித்திருந்தார். இன்னிக்கி நைட் எப்படி தூங்க போகிறோம் என்று பயத்துடன் படுத்திருந்த குமார் , தீபாவளிக்கு வாங்கின புதிய முண்டா பனியனுக்கும் பின்னாடி ஒட்டியிருந்த சில்வர் எனாமல் floresent ஸ்டிக்கரை பிச்சி தூக்கி போடாம செவுத்துல ஒட்டிவச்சிருந்தான் புரண்டு படுத்த குமாரின் கண்களில் அந்த sticker இன் ஒளி.. படபடத்துப்போன குமார் தூக்கத்தை மட்டும் தூங்கவைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்து . ஃபேஸ்புக் -ல நாலு பேர்க்கிட்ட சொல்லுவோம். கொஞ்சம் பயம் தெளியும்னு பனியனின் ஸ்டிக்கர் செய்திய போட்டான் . அதுக்கு ஒரு அண்ணன் சொல்றாங்க அது நரகாசுரனின் ஆவியாக இருக்கும்னு ...

புராண காலத்தில் செத்துப்போன நரகாசுரனின் ஆவி இன்னுமா இருக்கு ? நாட்ல மனுசனவிட ஆவிகள் தான் அதிகமா இருக்கும் போலருக்குன்னு தொடர்ந்து பேய் பீதியில் குமார். .

Monday, December 2, 2013

தண்டனையா ? தடுக்கப்பட வேண்டுமா...

நூற்று இருபது கோடி மக்கள் எண்ணிக்கையை நெருங்கிவிட்ட நமது தேசத்தில், வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, சுகாதாரக் குறைபாடு, லஞ்சம், ஊழல், திருட்டு, கொலை, கொள்ளை... இவைகள் எல்லாம் அன்றாடம்.

எல்லாமும் தவிர, மெல்ல வளர்ந்துவரும் ஒரு விஷச்செடியை போல வளர்ந்து எங்கும் கிளைபரப்பி இருக்கிறது மற்றுமொரு அவலம். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை....

பெண்கள், குழந்தைகள், வயோதிக பெண்கள், ஆண் சிறுவர்கள், என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த வன்முறை.

எப்போதும் செய்திகளாகவே கடந்து போய்க் கொண்டிருந்த நமக்கு, அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நிகழ்ந்து, நம்மையும் நிலைகுலையச் செய்து விடுகிறது.

1992 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த் துறையினரால் 18 பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.

2012 டிசம்பர் 16 ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு (Gang rape) கம்பியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது தலைநகரையே ஒரு உலுக்கு உலுக்கியது. அரசியல் காரணங்களுக்காக அது ஒரு தேசிய பிரச்சனையாகவே கையிலெடுத்துக் கொண்டது அரசு. நமக்கும் அப்போதுதான் குடல் நடுங்கும் பயம் தோன்ற ஆரம்பித்தது. அரசு செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் 13 நாட்கள் கழித்து நிர்பயா இறந்ததும் பல அவசர சட்டங்கள் நிறைவேற்றச் சொல்லி மக்கள் கொந்தளித்தனர்.

அந்தச் சுவடு கலையும் முன்னரே, 2013 ஆகஸ்ட் 22 ம் தேதி மற்றொரு இந்திய பெரு நகரமான மும்பையில் புகைப்பட பத்திரிகை நிரூபரை (photo journalist) ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்து (Gang rape) தாக்கியது. (Gang rape) எனும் இந்த வார்த்தையே அருவருக்கத் தக்கதாக இருக்கிறது.

இப்படி ஊடகங்கள் பெரிது படுத்திக் காட்டிய சம்பவங்கள் மிகமிகக் குறைவே.
இது போன்று நகரங்களிலும், பெரு நகரங்களிலும் நிகழும் சம்பவங்கள் மட்டுமே வெளியில் தெரிந்து

பெரிது படுத்தப்படுகிறது. இந்திய கிராமங்களில் நிகழும் சாதிய ரீதியிலான பாலியல் வன்முறைகள் வெளியில் தெரியாமலே மறைக்கப் பட்டுவிடுகிறது.

பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும் மனிதனால் வேட்டையாடப்பட்டு அந்த இனமே அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே இவைகளை கடவுளின் அவதாரமாக சித்தரித்து கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் கடவுளாக கொண்டாடப் படவேண்டிய பெண்களை, அதே மனித மிருகங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வேட்டையாடி அழிக்கிறது. இதை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக மட்டும் பார்க்ககூடாது. கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது, இன்று நேற்று நடப்பதல்ல.. காலம் காலமாக நடப்பது தான். வெளியே தெரியாமல் இருந்தது அவ்வளது தான். காட்சி ஊடகங்களின் அதீத வளர்ச்சி இந்தப் பிரச்சனையை பூதாகரமாக வளர்த்தெடுத்து இன்று அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும்.

2011 ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதிலும் 24,206 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கிறது. National Crime Records Bureau. (NCRB). புகார்கள் பதியப்படாமல் இருப்பது கணக்கில் அடங்காததாக இருக்கலாம் என்கிறது.

2012 லும் சரி, 2013 லும் சரி, ஐம்பது சதவிதம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருப்பதாக State Crime Records Bureau (SCRB) தெரிவிக்கிறது. தமிழகத்தில் இந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம், வெகுவாகப் பரவிவிட்ட மதுப் பழக்கம் மிக முக்கிய பங்குவகிப்பதாக தெரிவிக்கிறது.

புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களே இப்படி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னும் புகார்கள் கொடுக்கப்படாமல் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு பயந்தும், உயிர்களுக்கும், எதிர்காலங்களுக்கும் பயந்தும் இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக பயந்தும் புகார்களாக பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆசிரியர்களுக்கு கடந்த அக்டோபர் முதல் பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 17 முதல் பயிற்சி தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சியை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அளித்து வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க.. கடந்த பல தினங்களுக்கு முன்னர். அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாக்லேட் வாங்கித் தருவதாக பேரன் பேத்தி வயதிலிருக்கும் குழந்தைகளை, தாத்தா...

பெற்ற பெண்ணையே போகப் பொருளாக்கிய அப்பா...

பள்ளிக் குழந்தையை கடத்திச் சென்று கற்பழித்து பின் கொன்று வீசிய கொடூரன்.

இப்படியாக வீட்டிலும் வெளியிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் நம்ப முடியவில்லை என்று நினைத்தால் பல தொலைக்காட்சியில் இந்த சம்பவங்கள் குறித்து ஒருமணிநேர நிகழ்ச்சியே நடத்தப்பட்டு பஞ்சாயத்து செய்து
வைக்கிறார்கள். தெரியாதவர்கள் பார்க்கலாம்.

டெல்லி சம்பவத்திற்கு பின்னர் நாடெங்கிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் புரியும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர் அப்படி செய்துவிட்டால் குற்றம் குறைந்து விடுமா என்ன...? State Crime Records Bureau (SCRB) தமிழகத்தில் ஐம்பது சதவிகிதமாக அதிகரித்திருக்கும் பாலியல் குற்றத்திற்கு காரணம் மதுப்பழக்கம் என்றிருக்கிறபோது அதே சதவிகிதம் இந்தியா முழுவதிலும் இருக்கவே செய்யும். அரசே நடத்தும் மதுக்கடைகளை மூடினால் ஐம்பது சதவிகித குற்றம் குறையுமல்லவா... ஏனைய மாநிலங்களிலும் இதே கோரிக்கையை பெண்களும், பெண்கள் அமைப்புகளும் முன்னெடுக்கலாம் அல்லவா...  மதுவை எதிர்த்து பெண்கள் போராடுவது மிக மிகக் குறைவே.

நம் தேசத்தில் ஒவ்வொரு 20 முதல் 22 நிமிடத்திற்குள் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்கிறது NCRB.

இதனால் உலகெங்கிலும் இருந்து இந்தியா நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்துள்ளது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயை விட்டுத் தள்ளுங்கள்.

நமது தேசம் பெண்கள்வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தொலை நோக்குடன் சிந்திக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் தூக்கு தண்டனை கொடுத்தோ, ஆண்மை நீக்கம் செய்தோ இந்த குற்றங்களை குறைக்க முடியாது. தண்டனை கொடுக்கப் பட்டவன் குறிப்பிட்ட தவறை செய்ய மாட்டான் அவ்வளவு தானே...?

பெண்கள் கிளர்ச்சியை தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து வெளியில் வருவதினால் எளிதில் ஆண்கள் தவறு செய்ய தூண்டப் படுகிறார்கள் என்ற இந்த கருத்தில் நான் உடன் படவில்லை என்றாலும். பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அடுத்தவர்களின் ஆடை விசயத்தில் நாம் தலையிடுவது அனாவசியமான ஒன்று தான் என்றாலும். ஒரு குற்றம் நடந்துவிடுவதற்கு நாமும் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நமக்கு எந்த பங்கும் இருக்ககூடாது என்ற வகையில் பெண்களும் ஒரு சில விசயங்களில் உணர்ந்து செயல் படவேண்டும். பெண்கள் அமைப்புகள் பெண்களுக்கு இதை கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க நம் குழந்தைகளுக்கு நாமே நல்ல தொடுதல், (good touch,) எது (bad touch) கெட்ட தொடுதல் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இன்று இணையம் என்பது மிக எளிதில் கிடைக்கும் விசயமாக இருக்கிறது.  இணையம் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக ஒன்றி விட்டது. கையடக்க அலைபேசியின் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில தவறான விசயங்களை பார்க்க உந்தப் படுகிறார்கள். இதன் மூலம் பாலியல் உணர்ச்சிக்கு எளிதில் தூண்டப்படுகிறார்கள். இது தொடர்ந்தால் ஆபத்து. இதை கட்டுப் படுத்துவதில் பெற்றோரின் பங்கு அதிகமிருக்கிறது. சிறுவர்களுக்கு இணையப் பயன்பாட்டை முறையாக அளவாக பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.

மது மற்றும் போதைப் பொருட்களினால் பாலியல் குற்றம் அதிகரிக்கிறதென்றால் அதற்க்கு தடை விதிக்க வேண்டும். அதற்க்கு அடிமையானவர்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்களை அதிலிருந்து விடுபட வைக்கவேண்டும்.

இதையெல்லாம் தவிர பெண்ணை ஒரு சகமனுஷியாக பார்க்கவும். சுய கட்டுப்பாடும், தனிமனித ஒழுக்கமுமே இத்தகைய பாலியல் வன்முறைகள் நிகழாதிருக்க வழிவகை செய்யும்.

ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அவளை தொடுவதென்பது பாலியல் குற்றமாகும். அது அவனது மனைவியாகினும் கூட.

Saturday, November 30, 2013

2013 நவம்பர்-ல் facebook











நவம்பர் 2013 ல் facebook 

  • டார்வின் தியரியை பொய்யெனச்சொல்லவில்லை என் செயல்.
  • எனக்கும் எனக்கும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
    ஜெயிக்கப்போவது யாரென்று தெரியவில்லை.
  • 64 பாகம் கொண்ட சங்கிலி கருப்பரை தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இன்னும் கிடைத்தாரில்லை.
  • கார்பனும் நைட்ரஜனும் சேர்ந்து செய்த கலவை நான்.
  • ஒரு கவிதைக்கான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போதே
     அதற்கான வார்த்தைகளை தேடத்துவங்கிவிடு.
  • குடிக்க குடிக்க சுகம்.... சுடுதண்ணிய சொன்னேன்.
  • இந்த இரவு முடிவதற்குள் நிலாவை பற்றி ஒரு கவிதையாவது எழுதிவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    நிலா
    அழகு
    கவிதை
    இந்த மூன்று வார்த்தைகளைத்தவிர வேறெதையும் நான் எழுதியிருக்க மாட்டேன்.
  • ஹலோ..சுதாகர் எப்டி இருக்க...
    சுதாகர் இல்லையே... நீங்க யாரு...?
    சென்னை நம்பர் தானே இது...?
    இல்லங்க நீங்க நம்பர் மாத்தி அடிச்சிட்டிங்க...
    சரி மன்னிச்சுருங்க...# மன்னிக்க தெரிஞ்சவனோட மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன்.
  • மந்திரிசபை மாற்றம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு வரை. நான் போட்ட உத்தரவுகள் தூக்கத்தில் உளறியது என்ற செய்தி நாளை வருமானால் அ.தி.மு.க. வினரின் நேற்றைய விவாதம் கண்டு யாரும் சிரிக்கக்கூடாது.
  • கைகூடா காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது கடைபிடிக்கவேண்டிய அதிக பட்ச நாகரீகம்.
    கள்ளமில்லா ஒற்றைப்புன்னகையுடன் கடந்துவிடுவது.
  • நிலா .
    ஒப்புவமையிலாஅழகுப் பெண்.
    இரவுகளுக்கு சொந்தக்காரி.
    நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்.
    கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
    இவளின்றி அமையாது கவிதை .
     # சுட்ட கவிதை... எங்கிருந்துன்னு கேட்கக்கூடாது.
  • இன்றைய சில நிகழ்வுகள் என் மண்டைக்குள் alprazolam மருந்தை செலுத்தியிருக்கிறது. நிம்மதியாய் தூங்குவேன்.
  • சூனியமாகத்துடிக்கும் இன்றைய மணித்துளிகளுக்கு ஏதேனும் மந்திரம் ஓதிவிடவேண்டும்.
  • ம்ம்ம் இப்போ என்ன ஸ்டேடஸ் போடலாம்...
    குலாப் ஜாமூன் நல்லா இனிப்பா இருந்துச்சின்னு போடலாமா...
    குடிக்க குடிக்க சுகமா இருந்துச்சின்னு போடலாமா.... (சுடுதண்ணி)
    ஒரே தலைவலி... அப்டின்னு போடலாமா...
    எதுவுமே தோன மாட்டேங்குதுன்னு போடலாமா...
    தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்...
    எதையாவது போட்டே ஆகணும்.
  • 200 டெஸ்ட் விளையாண்டதுக்கு சச்சினுக்கு அஞ்சல் தலை...
    10 வருசத்துக்கும் மேல் உண்ணாவிரதம் இருந்துட்டு இருக்க இரோம் ஷர்மிளாவுக்கு... வெறும் பட்னி தான் தலையெழுத்தா...
  • நேற்றிருந்த எதுவும் இன்றில்லை. பிரபஞ்ச வெளியில் எல்லாம் கரைந்து போகிறது.
  • ஆளில்லாத உயர்ந்த மலையும், அடர்ந்து இருண்ட காடும், குறுகிப்போன குகையும், அகண்ட பாலைவனமும் வேண்டும் என் மனக்குமுறலை எதிரொலிக்க.
  • தூக்கம் வருமா தெரியாது.
    கனவு மட்டும் வரும்.
  • இந்த இரவின் குரல் கொன்னக்கோல் வாசித்தபடியே கரைத்து போகிறது.
  • கோட்டோவியமாக காமராஜரின் உருவம் வரைய எத்தனிக்கிறேன்...
    நேர்(மை) கோட்டிலிருந்து சற்றும் கூட வளைந்து கொடுக்க மறுக்கிறார்.
  • ( ) இந்த அடைப்பிற்குள் எத்தனை புள்ளிகள் மறைந்திருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது...
    ஆனால் ( ) இந்த அடைப்பிற்குள் உள்ள புள்ளிகளை மேல் அடைப்பிலுள்ள புள்ளிகளுடன் கழித்துப் பார்த்தால் புள்ளிகளே இல்லை என்று வருகிறது.
  • நல்லவன் மாதிரியே, ஈழ தமிழ்ல, அதே slang ல பேசுரான்யா டக்லஸ் தேவானந்தா..!!
  • ஓராயிரம் கவித்துளிகளுக்கான மழைத்துளியை பெய்து தந்திருக்கிறது இந்த பருவநிலை.
  • எந்த குதூகலத்திற்கும் இடமளிக்க மறுத்தே கடல் கலக்க ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஓடை.
  • இந்த இரவுப்பாலம் அதி பயங்கரமானது...
    கற்களும், முட்களும், கம்பிகளும், கனவுகளும் நிறைந்தே கிடக்கும்.
  • காசு, பணம், துட்டு... எல்லாம் செலவானபின் எஞ்சியிருக்கும் நேரத்தையும் செலவுசெய்து கொண்டிருக்கிறேன்.
  • useless fellow" இது எனக்குப் பொருத்தமாயிருக்கிறது.
  • வாழ்வு... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
    மரணம்... சிலருக்கு வரம். சிலருக்கு சாபம்.
  • பேயோன் facebook லிங்க் இருக்கா... யார்ட்டயாவது.
  • கடந்துபோன இரவு இன்னும் கொஞ்சம் நீண்டு, கடந்து போகாமலிருந்திருக்கலாம்.
  • அடர்மரங்களை எல்லாம் அழித்துக் கிளம்பிய அந்த கல்லூரி வளாக மூலையில் ஒற்றை நெட்லிங்க மர உச்சியிலிருந்து... எழுத்தால் நிரப்ப இயலா ஓசையில் கூவுகிறது அந்த மணிப்புறா.
  • நேத்து பிரபல தொலைகாட்சில ஒரு நிகழ்ச்சி....
    பல பிரபலங்கள் ! கலந்துகிட்ட நிகழ்ச்சி...
    அவர்களிடம் நிகழ்ச்சி நெறியாளர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா...?
    "முக்கோணத்துக்கு எத்துனை கோணம்". இந்த கஷ்டமான கேள்விக்கு
    அந்த பிரபலங்கள் மிச்சரியா !! "மூணு கோணம்" நு பதில் சொல்லிட்டாங்க...
    உடனே சுத்தியிருந்த பார்வையாளர்கள் எல்லாம் ஒரே கை தட்டல்.
    அப்புறம் ஏன் நாம் அப்டியே இருக்க மாட்டோம்...
  • விஞ்ஞானி என்று அறியப்பட்ட சி.என்.ஆர். ராவ்.
    பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர். ராவ். அரசியல் வாதிகளை முட்டாள்கள் என்று சொல்கிறார்...
    அதற்க்கு நீங்கள், அவர் ஏதோ புரியாமல் பேசுகிறார் என்கிறீர்கள்.
    இது தானா உங்க டக்கு...
  • உனக்குள் இருக்கும் வரை அது ரகசியம் தான்.
  • வேற்றுக்கிரகவாசி ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று.
    எனக்கும் அவனுக்குமான உரையாடலின் முதல் வார்த்தை, "என்ன சாப்டிங்க..."
  • பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் வடிவம் மாறியிருக்கிறதே தவிர, அது இன்னும் குறையவில்லை என்பதை பல தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் பார்க்க முடிகிறது.
  • சிக்கல் நிறைந்த உளவியலை உடைக்கும்போதெல்லாம் ஒரு மிருகத்தின் சம்பட்டியடி பலமாகவே விழுந்துவிடுகிறது.
  • ரிமோட் கையிளில்லாமல் சன் டிவி பார்ப்பவர்கள் கல்லுளி மங்கர்களாக கருதப்படுவர்.
  • facebook பயன்பாட்டாளரை MOBILE, WEB ன்னு எழுத்தால தனித்தனியா காட்டுது chat list ல.
  • மூன்று வருடங்களாக படுக்கையிலிருந்த அம்மாவை பார்த்துக் கொண்டதற்காக பெரியண்ணன் தன் தம்பிக்கு கொடுத்த தொகை, பத்......தா...யிரம் ரூபாய்.
  • நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லியதால்
     நீ நானாகிறாய்.
  • விசயத்தை செல்லத்தொடங்கினான்,
    பேசத்தவர மட்டார்,
    பொறியில் படிப்பு ,
    அவர் சேர்வாக அமர்ந்தார் ,
    அங்கே பேய் சேர்ந்தார்.
    அவர் ஒரு புதிய தொனியில் கோட்டார்.

     இப்டிலாம் படிக்கிறேன்.
  • அவன கொண்ணு....
    அவங்குடும்பத்த அழிச்சி...
    அந்த குடும்பத்துல இருக்க ஒருத்தர கூட நிம்மதியில்லாம நடுத்தெருவுல நிறுத்துற அன்னிக்கி தான் எனக்கு நிம்மதியாவே இருக்கும்...

     # தமிழ் சீரியல் கத்துக்குடுக்கும் பாடம்.
  • சுமைகூடி கடந்த நிமிடங்களுக்கு மத்தியில்
    எங்கிருந்தோ எடை குறைக்க வந்த அந்த
    எதிர்பார்த்தும், எதிர்பாரா ப்ரியம்...
    காட்டிக்கொள்ள விரும்பாத அந்த அக்கறை .
    சோர்வுறும்போதெல்லாம் தட்டியெழுப்பிய அந்த எழுத்துக்கள்.
     எங்கும் தொய்வை திணிக்காமல் நகர்த்திச்செல்கிறது.
  • பொடி தோசைக்கு புதினா சட்னியும், தேங்காய் சட்னியுமாக துணைசெய்தபோது, பிரபல செய்தி சேனலில் "ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு" என்ற செய்தி...
    அப்படி என்ன வாய்ப்பளிக்க போகிறார்கள்... ஆந்திராவில்.
    தமிழகத்தில் செய்யாத கவிதையை விடவா வாய்ப்பளித்துவிட போகிறார்கள் அந்த மழைக்கு...?
     சத்தியமாக பேயோன் எனக்குள் இல்லை.
  • செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள்.
     அடக்கி வாசிங்க விஞ்ஞானிகளே..
  • நீங்கள் உதறிய நிலைத்தகவல்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவில் Like or Comment வரவில்லை என்றால்... எங்கோ நான்கு மணிநேர மின்வெட்டு அமலில் இருப்பதாக கொள்ளவும்.
  • விஸ்வநாதன் ஆனந்த் ஜி... சீசன் சரியில்ல. ஒரு crocin போட்டுட்டு விளையாடுங்க.
  • என்னங்க.... வரும்போது சால்ட் உப்பு ஒரு பாக்கெட்டும், கல்லு உப்பு ஒரு பாக்கெட்டும் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க... # எங்கேயோ கேட்ட குரல்.
  • இன்னும் ஒரு மாதகாலத்திற்கு தினசரி, தினசரி கிழிக்கும் வேலையை இல்லாமல் செய்துவிட்டாள் ஒரு பூனை பூம் பூம்.
  • பத்து ரூபாய் எடுத்துப்போய் நாடார் கடையில் 50 தேங்காய் எண்ணெய், 2 ரூபாய்க்கு பொட்டுக்கடலை , 1 ரூபாய்க்கு தேங்காய் சில், ஒரு பொன்வண்டு சோப்பு வாங்கிட்டு பாக்கி காசும் வாங்கி வந்த கனவு ஒன்றை நேற்று இரவு கண்டேன். கனவு தான் காண முடியும்.
  • ஓர் ஊமைத்தாயின் தாலாட்டுக்காக விழித்துக் கிடக்கிறது என் உறக்கம்.
  • ஒரு கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதென்பதும், கௌரவிக்க வேண்டும் என்பதும் அவன் வாழும் காலங்களில் கொடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, அவன் இறந்த பின் சிலை வைப்பதும், பின்பு அதை அகற்றுவதும் மிகக்கேவலமான சிந்தனை.
  • "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திற்கு பின்னரான மிஷ்கினின் வார்த்தைகளில் கர்வம் கூடியிருக்கிறது.
  • வலி தாங்கமுடியாத பசு, தெளிவான வார்த்தையில் "அம்மா..." என்கிறது.
  • இந்த நீதி மன்றங்கள் இப்படி பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றன. செல்வாக்கு உள்ள மனிதர்கள் எதையும் சந்திக்க தயாராகவே இருப்பார்கள், இருக்கிறார்கள். இப்போதைக்கு ஒரு டீ சொல்லு மச்சி.
  • யோவ்.... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்யா.... ரொம்ப கஷ்டம். நீ வேணா ட்ரை பண்றியா...
  • facebook password மறந்து போச்சுன்னு அவனோட நண்பன் பத்துபேருக்கு போன் பண்ணி கேட்டு login பண்ற நண்பனெல்லாம் என் கூட இருக்கதாலதான் நானெல்லாம் சிரிக்கிறேன்.
  • ஒரே சளியா இருக்குன்னு சொன்னேன்...
     நண்பன் சொல்றான் wills ல vicks தடவி அடி சரியாகிடும்னு...நீங்க சொல்லுங்க... என்ன பண்ணலாம்.
  • அம்ருத வர்ஷினி ராகத்துல பாடினா மழை வருமாமே...
     பாடவா...
  • அவ்வப்போது வந்து ஒரு like விதை இட்டுப்போ...
     அப்போதான் எனக்குள் வார்த்தைகள் முளைவிடும். # முனியம்மாவுக்கு மட்டும்.
  • கரண்ட் போகப்போகுது.....
     நா log out பண்ணிட்டேன்.
  • வலுவிழந்த வாகனம்
    வறண்ட சன்னலோரங்கள்
    சுவாரஸ்யம் இல்லாத பயணம்
    இடையிடையே ஏறியவர்கள்
    இடையிடையே இறங்கியவர்கள்
    போகும் தூரம் எக்கணம் குறையும்
     என்ற எதிர்பார்ப்பில்.
  • கொட்டும் மழைத்துளிகளால்
    சிதரிக்கொண்டே இருக்கும் நிலாவை
     உள்ளங்கையில் சேர்க்கத் துடிக்கிறேன்.
  • அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...# இந்த ஆசிரியருக்கெல்லாம் பொம்பள புள்ள இருந்தா எப்டி அதுங்க மூஞ்ச பாப்பாங்க.
  • ஓ... நீங்க எழுதுவிங்களா....
    எப்போவெல்லாம் எழுதுவிங்க...
     சும்மாருக்க டைரியும், தீராத மையும் வீணா போகுமேன்னு அப்போ அப்போ எழுதுவேன்.
  • USB port ல எதுவுமே செருகல USB Detected. Scan the driver for viruses now ன்னு கேக்குது. பேயா இருக்குமோன்னு பயமா இருக்கு.
  • மிகக்குறைவான நேரமே இருப்பதால் இலக்கை நிர்ணயிப்பதில் குழம்பி, இருந்த நேரத்தையும் வீணடித்து, எங்கேயோ செல்கிறது இந்த பாதை.
  • கற்பனையாக எழுதுவதை கூட பொய் எழுதாதே எனும் மனநிலையை எப்படி சீர்செய்யமுடியும்.
  • டாஸ்மாக் கும், ஃபேஸ்புக் கும் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

Friday, November 29, 2013

ஓர் நடை பயணத்தில்

நடந்தாலென்ன ?என்று
நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம்
முகம் முழுக்க பச்சை சாயம்
பூசிக்காட்டினான்.

எப்போதும் நாணம் கொண்டே
வளைந்து நெளிந்தோடிக்கிடந்த
சாலைப்பயணம் .

வலப்புறம் உள்ளடங்கி
ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில்
படித்த பருவங்களை
ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில்
போதுமான இடைவெளியற்றிருந்த
அரசு மதுக்கடையில்
ஆடை கலைந்தவர்கள் கூட்டம்
அநாகரீக வார்த்தைகளை
அள்ளி வீசிக்கொண்டிருந்தது .
வெட்கப்பட்ட காதுகளை
மூடிக்கொள்ள உத்தரவிடாத மூளை
முந்திச்செல்ல கால்களை பணித்தது .

அலைந்து திரிந்த கண்களுக்கு
அடுத்ததாய் அகப்பட்டது
அய்யாவு "டீ" கடையில்
வெட்டவெளியில் பிரமீடுகளாய்
தூசுதின்ற பலகாரம் .
விபரீதம் புரியாமல் பசிப்பிணி போக்கமட்டும்
எடுத்துக்கொண்டிருந்தனர்
துப்புரவு பணியாள தோழர்கூட்டம்.

சற்றே நாணி த்திரும்பிய சாலை முக்கில்
கணபதி மரப்பட்டறையில்
கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான்
நாசிக்கவசம் அணியாத சுந்தரம் .

கவலை கப்பிக்கொண்டு
கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்த கண்களை
கடிவாளம் கிழித்த செயற்கை மின்னல் தாக்கியது !
ஆம் , “பெர்பெஃக்ட்“வெல்டிங் வொர்க் ஷாப் இல்
பாதுகாப்புக் கண்ணாடி அணியாமல்
சிறிதொரு பத்தவைப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தான்
தொழிலாளி சண்முகம்.
ஒய்யார நாற்காலியில்
கூலிங் கிளாஸ் அணிந்தவாறு முதலாளி .

மூன்று பேர் பயணித்த
ஒற்றை இருசக்கர வாகனத்தை மறித்த
போக்குவரத்துக் காவலர் ஒருவர்.
அரசு விதிக்கும் அபராதத்தொகையை கட்டினாலுனக்கு
கட்டுபடியாகாதென்ற பேச்சுவார்த்தையில் சமரசம் கொண்டு
சகாயம் செய்துகொண்டிருந்தார்கள் .

இரண்டு வேலை உணவருந்தும்
தட்டுவண்டி இட்லி கடைக்காரரை
போக்குவரத்திற்கு இடையூரென்று
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்
காவலரொருவர்.

தாளமுடியாத தலைவலி தளர்த்திட எண்ணி
மெடிக்கல் ஷாப் படியேறினேன்.
தலைவலி மாத்திரை கேட்டு
தண்ணீர் எடுக்க குனிந்து திரும்பினேன் !
கண்ணாடியில் கவிந்திருந்தது

ஸ்ப்ரிட் நனைத்த காட்டன் துணியில்
ஃபிசிசியன் சாம்பிள் நாட் டூ பீ சோல்டு -ஐ
அழித்துக்கொண்டிருந்த முதலாளியின் முகம் .

அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில்
கச்சிதமாய் அடைக்கப்பட்ட போதை லாகிரிகள்
பெட்டிக்கடையில் மட்டும்
பயந்து பயந்து பிரசவமாகிக்கொண்டிருந்தது!!
கூடவே கொட்டைஎழுத்தில்
புகைத்தல் உடல் நலத்திற்கு கேடென்று பதியப் பட்டிருந்த
வெண் சுருட்டும் .

போர்க்குற்ற செய்தியை
பெட்டிசெய்தியில் கூட
தேடிக்கிடைக்காத ஏமாற்றத்தில்
கார்ப்பரேட் கம்பெனி தயாரித்திருந்த
திரைப்பட விளம்பரத்தையும் .
கொட்டை எழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
ஐ .பி .எல் கிரிக்கெட் செய்தியையும் ,
12 -ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்த
மந்திரிகள் பட்டியலையும்.
கொடுத்த காசிற்காய் வாசித்துக் கொண்டிருந்தார்
சமூக ஆர்வலர் ஒருவர் !!

அய்யாவு "டீ" கடை பலகாரமும்
தட்டு வண்டி இட்லி கடையும்
இங்கே கொஞ்சம் முரண்பட்டே
சொல்லப்பட்டிருக்கும் .

உற்று நோக்கினால்
வாழ்தலே முரண்தான் இங்கே
முரண்பட்டுநிற்கும் சமூகத்தில்
வாழ்தலின் கட்டாயமும் முரண்தான்.

Thursday, November 28, 2013

நன்றி சொல்லிப் பறந்த காகிதம்

ஏதும் எழுதப்படாமல் உபயோகமற்றிருப்பதாக
சலசலத்துக் கிடந்தது அந்தக் காகிதம்.
எதையோ எழுதவேண்டும் என்றெண்ணிய எனக்கு
அந்தக் காகிதம் கண்ணில் பட்டது.

கையிலெடுத்ததும் மொட மொடவென
சிரித்து சிலாகித்துக் கொண்டது அக்காகிதம்.

கவிதை என்றெழுதி ஒரு தலைப்பிட்டதும்
காற்றை இழுத்து தன் மேல்முனை இரண்டையும்
சட்டைக் காலரைப் போல் கம்பீரமாக தூக்கிவிட்டுக் கொண்டது.

எழுத்தாணியின் கூர்முனை தீண்டலுக்கு அது
கொஞ்சமும் அஞ்சியிருக்கவில்லை - மாறாக
தன் மேல் எழுதப்படும் வார்த்தைகள் யார்மீதும்
குத்தீட்டியாய் பாய்ந்து விடாமலிருக்க வேண்டுமென அஞ்சியது.

முதல் பக்கத்தின் முடிவில் குத்தீட்டியாய் எழுதப்பட்ட ஒரு
வார்த்தையை திருத்தும்வரை மறுபக்கம் மாற மறுத்தது அக்காகிதம்.

தமிழின் வார்த்தைகளை எழுதும் போதெல்லாம்
சிலாகித்த காகிதம்.
மாற்றுமொழி கலந்த வார்த்தைகள் எழுதிய போதெல்லாம்
எழுத்தாணியின் கூர்முனைக்கு வார்த்தைகளை அனுப்ப மறுத்தது

எழுதியதை கணினியில் தட்டச்சிட்டு
இனி இக்காகிதம் உபயோகமற்றதென வீசி எறிந்தபோது

இப் பேரண்டத்தில் பேசப்படாத மொழியில்
நன்றியைத் தன் வாலால் சொல்லிவிட்டு ஓடும் நாய் போல
பூமியில் புரண்டோடியது அக்காகிதம்.

Tuesday, November 26, 2013

எது அது


தேனடையை சுற்றியிருக்கும் ஈக்கள் போல அந்த அரளி மர நிழலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை சுற்றி மஞ்சள் நிறத்தில் பூக்கள் உதிர்ந்து கிடந்தது. எப்போதும் போலவே சுப்பு தனது அலுவலகம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச்சென்றான்.

அப்போது அந்த மரப்பொந்தின் கூட்டுக்குள்ளிருந்து தாய்க்குருவி தன் குஞ்சுகளை விட்டு வெளியில் வந்து, பறந்து பறந்து கிளைகளில் அமர்வதும், பின்பு கூட்டுக்கு செல்வதுமாகவே இருந்தது.  இதை பார்த்துக் கொண்டிருந்த சுப்பு, இரைதேட விட்டுப்பிரியும் போதே நிரந்தர பிரிதலுக்கான  ஒத்திகையை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். விட்டுப் பிரிதலை விட அதற்கான ஒத்திகை பார்ப்பதென்பது அதிக வலியாகவே அந்த தாய்க்குருவிக்கும் தெரிந்திருந்ததில் சுப்புவுக்கு ரொம்பவே ஆச்சர்யம்.

சுப்புவும் சில நாட்களாக தன் குடும்பத்தை நிரந்தரமாக விட்டுப் பிரிவதற்கான ஒத்திகையைபார்த்துக் கொண்டிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கான மன உளைச்சல்
அவனை அவ்வாறு தூண்டிக்கொண்டிருந்தது.




கலையாத படிமம்

மிச்சமிருக்கும் கரும் படிமங்களையும் உதறி விடிந்த
இரவுப் போர்வைக்குள் கலையாத படிமமாய்...

ஒரு ஒண்டிக் கிடந்தவனின் கனவு
ஒண்ட இடம் தேடியவனின் வெற்றி.
புசித்துக் கிடந்தவனின் கனவு
பசித்துக் கிடந்தவனின் தோல்வி.
தூக்கம் அலைய விட்டவனின் கனவு
தூங்கிப் போனவனின் வெற்றி.
கூடிக் கிடந்தவனின் கனவு
துணை தேடியவனின் தோல்வி.
துணை கிடைத்தவளின் கனவு
வலி தாங்க முடியாதவளின் வெற்றி.
விக்கிக் கிடந்தவனின் தாகம்
சிறுநீர் கழிக்க முடியாதவனின் விரக்தி.
வம்பு நிறைந்த வார்த்தைகள்
உணர்ச்சியில்லா மனிதர்கள்
ஒருவருமில்லா சாலை
முக்காடுகளால் நிரம்பிக் கிடந்த நடைபாதை
கயவர்களின் கத்தி முனை
நீண்டு நடந்திருந்த ஒற்றைப் பாதைச் சுவடு.

Monday, November 25, 2013

நான் பெற்றெடுக்காத என் மகளுக்காக

அந்தரக் கூத்தாடும் ஆலவிழு தொன்றை
தன்னுடன் கலந்து ஸ்பரிசித்துக் கொள்ள 
கொஞ்சம் கொஞ்சமாய்
மீட்டிக்கொண்டிருக்கிறது காற்று.

அன்பும் அக்கறையுமாக ஊற்றி வளர்த்த
தாய் மரத்தின் கிளை விழுது வேறுபக்கம் அசைந்து
சுவாசம் கொள்ளும்போது

தாய் மரம் தன் இருப்பின் மீதான
நிலைப்பாட்டிலிருந்து
தன்னை மீட்டுக்கொண்டு .

மேலும் மேலும் அன்பும் அக்கறையுமாகவே
ஊற்றி ஊற்றி கிளை விழுதினை பத்திரமாக
மண் பிடித்துக் கொள்ளச்செய்கிறது.

Saturday, November 23, 2013

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே...

விஸ்வநாதன் ஆனந்த்... இந்திய சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ராஜீவ் காந்தி கேல்ரத்னா, மற்றும் அர்ஜுனா விருது. மற்றும் உலகின் ஆஸ்கார் போன்ற பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சதுரங்க விளையாட்டில் ரஷ்யர்களின் ஆதிக்கத்தை உடைத்து, சதுரங்க உலகின் ராஜாவாக ஐந்துமுறை முடிசூடிக்கொண்டவர், ஆறாவது முறையாக அந்த பட்டத்தை தனது சொந்த மண்ணிலேயே, நார்வே நாட்டை சார்ந்த மேக்னஸ் கார்ல்சனிடம் 6.5 புள்ளிகளுடன் தவறவிட்டுள்ளார்.

உலகளவில் சதுரங்க விளையாட்டில் நகர்த்தமுடியாத ராஜாவாக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

கடந்த காலங்களில் விஸ்வநாதன் ஆனந்திடமே உதவியாளராக இருந்த கார்ல்சன், அவரது விளையாட்டு நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து இன்று அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேயே அந்த சிங்கத்தை சாய்த்திருப்பது விஸ்வநாதன் ஆனந்துக்குமே கூட அதிர்ச்சியாக இருக்கலாம்.

விளையாட்டுகளில் வெற்றியும் தோல்வியும் இரு முனைகள் தான். இருப்பினும் எந்த ஒரு வீரனும் தான் தோல்வியுறுவதை விரும்புவதே இல்லை. தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்த தோல்வி சற்றே மன உளைச்சலை கொடுத்திருக்கும்.

அதுவும் தனது சொந்த மண்ணில் தனது ரசிகர்களையும், மக்களையும் தனது தோல்வி  சோர்வடைய செய்துவிட்டதாக கூட அவர் உணரலாம். வயதுமூப்பின் காரணமாக தன்னால் சிந்திக்க முடியவில்லை என்று கூட உணரலாம். இதெல்லாம் சரி என்பது போலவே ஆனந்தின் ஆட்ட நகர்த்தலும் இருந்திருக்கிறது.

இப்போட்டியில் 7 சுற்றுகள் டிராவில் முடிந்திருக்கிறது. 3 சுற்றுகளில் ஆனந்த் தோல்வியை தழுவியிருக்கிறார். இத்தொடர் முழுவதும் கார்ல்சன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருப்பதாக நிபுணர்கள் சொன்ன கருத்தை ஆனந்தும் ஆமோதித்திருக்கிறார்.

மேலும் இதற்க்கு முன்னரான உலக சாம்பியன் போட்டிகளில் ஆனந்த்துடன் மோதிய வீரர்கள், "இந்த போட்டிகள் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. அவ்வளது எளிதாக என்னால் காய்கள் நகர்த்தலை கையாள முடியவில்லை. ஆனந்த் உடனான இந்த போட்டி ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது .” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவுமே மேக்னஸ் கார்ல்சன் சொல்லவில்லை.

ஆனந்திடம் விளையாடியது சற்று சிரமமாகவே இருந்தது என்று பெயரளவில் மட்டுமே கார்ல்சன் சொல்லியிருந்தாலும். ஆனந்த் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். சதுரங்க விளயாட்டில் இது நிகழ்வது தான். என்றாலும், ஐந்து உலக சாம்பியன் பட்டங்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருக்கும் ஆனந்த் என்ன தவறு செய்தார் என்பதை பின்னாளில் வரும் போட்டிகளில் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஐந்து உலக சாம்பியன் பட்டம் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களை குவித்திருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு அனுபவங்களை கூட வயதாக அடையாத மேக்னஸ் கார்ல்சன் , விளையாட்டின் போது எந்த வித பதர்ஷ்டமுமே இல்லாமல் மிக சாதாரணமாகவே காணப்பட்டார்.  அவரது இந்த வெற்றி அவரது வாழ்வில் மிகமுக்கியமான வெற்றியாகவே இருக்கும். இன்னும் 20 வருடங்களுக்கு  யாரும் அசைத்துவிட முடியாத சதுரங்க ஆட்டக்காரராக திகழ்வார் என்று ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறது.

திறமையும் உழைப்பும் எங்கிருந்து வெற்றியடைகிறதோ அதை நாம் தூரநின்று ஊக்கப்படுத்தவும்,
உற்சாகப் படுத்தவும் வேண்டும். இது நாம் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. அந்த வகையில்
மேக்னஸ் கார்ல்சனுக்கு நமது வாழ்த்துக்கள்.

பல பட்டங்களை வென்று அனுபவங்களாக குவித்து வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த்
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

சென்றது மீளும் ஆனந்த் அவர்களே... சிறிது ஓய்விற்குப் பின் மீண்டும் வாருங்கள். மீண்டு வருவீர்கள்.


Wednesday, November 20, 2013

கண் தானம் கடைசி ஆசை



உயிர்வீழ்ந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை
என்னின் வீழ்ச்சி செய்தி கேட்டு
அதிர்ந்த பல உள்ளங்கள் காண ஆசை
எனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக .
வீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை .
ஆகவே ... 
வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்

ஒரு நாள் மட்டும் ஆசை.ஆம்

பிறவியிலேயே பார்வைத் திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரு நாள் மட்டும் ஆசை
பிறவியிலேயே கேட்புத் திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரு நாள் மட்டுமே ஆசை
பிறவியிலேயே பேச்சுத்திறனற்றவனாய் இருந்திருக்க
ஒரே ஒரு நாள் மட்டுமே ஆசை
ஒரு நாள் போதும் …
ஆம் . ஒரே ஒரு நாள் மட்டுமே போதும்
வேறெப்படி விவரிப்பேன்
நான் கண்ட கனவுகளை. ?

Monday, November 18, 2013

2013 செப்டம்பர் , அக்டோபர் ல் facebook






















2013 செப்டம்பர் அக்டோபர் - ல் facebook
  • இப்பருக்க ஒரே ஆறுதல் அடிக்கடி கழுத்தறுத்த laptop தொந்தரவு குடுக்கல ரெண்டு நாளா.... chrome அ விட்டு மாறினதிலேருந்து நல்லாருக்கு.
  • போர் அடிச்சுதா... அதான் கோபத்துல deactive பண்ணிட்டேன்.
    மறுபடியும் போர் அடிச்சுதா.... அதான் கோபத்துல active பண்ணிட்டேன்.
  • அடர்த்தியான மன இறுக்கத்தை கலையச்செய்யும் சிகிச்சையை யாரிடமிருந்து கற்றுவந்தாய் குழந்தாய் நீ....
    நீ என் உறவெனும் போது சற்றே கூடுதல் மகிழ்ச்சி எனக்கு.
    நிலா...நீ... மாமனைப் பார்க்க எப்போது வருவாய்...
    ஏதாவது ஒரு பௌர்ணமி கழித்து வருவாய்...
    காத்திருப்பேன்.
  • ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே என்ன கான்சப்ட்ன்னு கேட்க்காம
    யாரு ஹீரோவா நடிக்கிறான்னு கேட்பவனே தமிழின் மிகச்சிறந்த ரசிகன்.
  • பிள்ளையாருக்கு தொந்தியும் தும்பிக்கையும் வைத்து இன்றைய தினம் வயிற்றைக் கழுவிய அந்த மண் சிற்ப்பியின் இன்றைய கனவு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்...
  • ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் கொலை கூட செய்வேன்.
    கொடுக்காவிட்டாலும் அப்படித்தான்.
  • ம்மா... ஒரு டீ...
  • ஆயிரங்களை கொடுத்துப் பெற்ற உன் jeans pant. அரைநிர்வாண மனநோயாளியை கடந்து போகும்போது உறுத்தவில்லை என்றால்....
    உனக்கும் எனது தீபாவளி வாழ்த்து.
  • படகும் துடுப்பும் மட்டுமே போதவில்லை பயணம் செய்ய.
    நீர் நிறைந்த ஓடையும் தேவைப்படுகிறது.
  • எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...
    தொலைந்த பொருள் எதுவென்றும் நினைவிலில்லை.
  • விஷம் கலந்து அவன் அருந்திய அந்த மதுக்குவளையில்
    ஓரிரு துளிகள் எஞ்சியிருக்கலாம்.
    தனிமை சூழ்ந்த அந்த இரவில் அவனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு...
    அந்த அழைப்பை ஏற்றவன் நிரந்தர மயக்கநிலைக்கு சென்றிருந்த போது.
    அலைபேசியின் எதிர்முனை குரல்.
    "சார் உங்களோட கதையை படமா தயரிச்சுடலாம்னு சார் சொல்லிட்டார்.... நாளை காலை எங்க ஆபீஸ் வந்துருங்க...."

பேராபத்தான கவிதை

நான் எழுதப்போகும் இந்த கவிதையின்
முதல் வரி மனநோயாளியின் அம்மணத்தை மறைத்துவிடும்.
இரண்டாம் வரி ஆண்ட குடும்பத்திலிருந்து ஆண்டியாகிப் போனவன் வயிறை நிறைத்துவிடும்.
மூன்றாம் வரி எங்கோ நடந்த இனப்படுகொலைக்கு
நியாயம் பெற்றுத்தரும்.
நான்காம் வரியில் சாதிகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும்.
ஐந்தாம் வரி ஆங்காங்கே நிகழும் வன்கொடுமைகளையும்
வன்முறைகளையும் ஒழித்துவிடும்.
ஆறாம் வரி நான் மட்டும் நல்லவனென எழுதப்படுகிறது.
ஏழாம் வரி என்னை விளம்பரப் படுத்திக்கொள்ள எழுதப்படுகிறது.
கடைசி வரி பேராபத்தை விளைவிக்கும் வார்த்தைகளை எழுதவைத்துவிடலாம்.

காரணம் வெங்காயம்

சித்தப்பா சுட்டிக்காட்டிய மணாளனுக்கு வாக்கப்பட்டு
புகுந்தகம் போயிருந்த முதல் தினமன்று .
ஆனந்த ஒலியும் ஆனந்த ஒளியும்
வியாபித்துக் கிடந்த புகுந்தகத்தில்
அவளின் முட்களற்ற கண்மீன்கள் இரண்டிலிருந்தும்
வெந்நீர் ஊற்றெடுத்து ததும்பிக் கொண்டிருந்ததை
அள்ளிப் பாய்ச்சிக்கொண்டிருந்தாள் அடுக்களையில்.
அவளின் கண்ணீருக்கு காரணம் கேட்பவர்களுக்கு
பதிலாய் வைத்திருந்தாள்
கையில் கத்தியும் வெங்காயமும் .


Sunday, November 17, 2013

தலைப்பில்லை

சுப்பு எனக்கு அறிமுகமானது அவனுடைய 10 வது வயதில்தான். அப்போதான் அவனுடைய அப்பா இறந்திருந்தார். அவனது அப்பாவை சுற்றியிருந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அழுததால் இவனும் ஒருமுறை அழுதுவிட்டு என்னை கோலி விளையாட கூப்பிட்டான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கும் அவனுடைய வயது தான்... அம்மாவும், மூன்று தங்கைகளும் அவனுக்கு. அம்மா, அப்பா வழி சொத்துக்கள் எதுவும் கிடையாது. அவனது அப்பா அரசு ஊழியர். பென்ஷன் திட்டம் செயலில் வராத ஒரு துறை.

அந்த குடும்பத்தின் சுமை இனி இவனுக்கானது. எப்படி இவன் இதை சுமக்கப்போகிறான் என்ற உறுத்தல் எனக்கு அன்று ஏற்பட்டது.

அவன் அப்பா இருந்தவரையில் ஆவரேஜிக்கும் சற்று கூடுதலாக மதிப்பெண் வாங்குவான். அதன் பின்னர் விளையாட்டு பிள்ளையானான். எப்போதும் என்கூடவே சுற்றுவான். நான் ச்சுச்சா போக சாக்கடை ஓரம் போனால் அவனுக்கு வருதோ இல்லையோ... அவனும் ட்ரவுசரை தூக்கிக்கொண்டு வந்து சும்மா நின்றுவிட்டு என்கூடவே வருவான். இப்படி பொறுப்பற்று போனவனின் போக்கு எங்கே U டேர்ன் அடித்தது என்று தெரியவில்லை.

காரணம் என்னுடைய அப்பா திடீரென சென்னைக்கு பனி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் எல்லோரும் சென்னைக்கு இடம் மாறியிருந்தோம்.

மறுபடியும் 12 வருடங்கள் கழித்து சுப்புவை வந்து பார்த்தல் ஆளே மாறியிருந்தான். அவனுடைய அப்பா வேலைக்கு அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அவனது தங்கைகள் இருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தான். மற்றொரு தங்கை படிப்பு முடிக்கு தருவாயில் இருந்தால்.

Saturday, November 16, 2013

இணையத்தில் கிடைத்த முனியம்மா


 இணையத்தில் கிடைத்த முனியம்மா 


நகரத்தின் மையப்பகுதியென்றே கொள்ளலாம் கவியமுதன் பிறந்து , வளர்ந்தது…. அநேகமாக அவன் வாழ்வை முடிக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும் . 

எதிரெதிரே வீடுகளுள்ள நீண்ட வீதியில்தான் அவனது குடியிருப்பு . 
எப்போதும் பரபரப்பை உடுத்திக்கூத்தாடும் வீதியது . 
ஏறக்குறைய ஏழு வீதிகளின் கிளைப்பாதை இந்த வீதிதான் .

திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் மூன்று வயது முதலான மெட்ரிகுலேசன் குழந்தைகள் தெரு முக்கத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் திண்ணையில் தான் வேனுக்காக காத்திருப்பார்கள் . 

வாரத்தின் ஏழு நாட்களிலும் , மூங்கிலை கூறு போட்டுச்சீவிய குச்சிகளால் பின்னப்பட்ட பெரிய கூடைகளை சைக்கிளில் பின்புறம் பெரிய கேரியரில் கட்டிக்கொண்டு பக்கத்து கிராமங்களிலிருந்து காய்கறிகளை ஆந்தை குரலில் கூவி விற்றுக்கொண்டு அங்குமிங்குமாக திரிவார்கள்.

வீதியின் மற்றொரு முனையில் கணேச நாடார் மளிகை கடை. இங்கே சகல சாமான்களும் கிடைக்கும் . எதிர்பாராத விருந்தாளிகளுக்கு உள்நாட்டு குளிர்பானம் முதல் பன்னாட்டு குளிர்பானங்கள் வரை வாங்க கூட கணேச நாடார் மளிகை கடையை கடந்து யாரும் போகமாட்டார்கள். வாடிக்கயாளரிடமிருந்து வாங்கும் காசிற்கு பொருள்களுடன் இலவசமாக சிரிப்பையும் , அன்பான வார்த்தைகளையும் சேர்த்துக்கொடுக்க இவர் ஒரு போதும் தவறவே மாட்டார். 

கவியமுதனின் தந்தை அரிமாவளவன் . இவர் ஒரு தமிழாசிரியர் . யாருடன் பேசினாலும் செம்மொழி சாரல் சிந்தாமல் வாய்மூட மாட்டார். தான் முதுகலை தமிழ் படிக்கும்போது தன்னுடன் கூடப்படித்த வாசிகபாரதியை காதல் மனம் புரிந்தவர் . தமிழ் மீதுள்ள பற்றால் கவியமுதனின் தம்பிக்கும் அமலன் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் .

அரிமாவளவன் தம்பதியர் தங்களது குழந்தைகளை தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களாக திட்டமிட்டு தமிழ் பாலூட்டி வளர்த்தார்களே தவிர... இவர்களது உத்தியோகம் சார்ந்த படிப்பு கணினி சார்ந்ததாகவே இருந்தது . இதற்கு காரணம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் . குறுகிய காலத்தில் மிகையாக பொருள் தேடும் உத்தி. இன்றைய சூழல் அப்படி ! இவர்கள் மட்டும் இழிச்ச வாயர்களாக இருந்தால் சமூகம் மாறிவிடுமா என்ன ? தமிழ் படிப்பதை இழிச்சவாய்த்தனம் என்கிறது இன்றைய சமூகம் .

கடிவாளம் கட்டிய பந்தயக்குதிரையின் மீதமர்ந்து வேகமாய் பயணித்துக் கடத்திய வழக்கமான வாரக்கடைசி தினமன்று....

பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி.... அலுவலக வேலைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான் கவியமுதன் . ஏற்கனவே சென்னை to தஞ்சவூருக்காக பதிவு செய்து வைத்திருந்த பயணச்சீட்டை தனது கருப்பு நிற money purse க்குள் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டான் .

ஒரு மாதம் கழித்து தன் குடும்பத்தாரை பார்க்கசெல்லும் ஆர்வமும் , பரபரப்பும் அவனது முகத்தில் புரையோடிக் கிடந்தது. 

எப்போதும் வாரம் ஒரு முறை செல்பவன் இடையறாத கடின வேலை காரணமாக செல்ல முடியாமல் இருந்திருந்தது .

அலுவலகம் முடிந்து தன் ரூமிற்கு சென்று அவசரம் அவசரமாக கிளம்பி பேருந்து நிலையம் வந்து தனக்காகவே நின்று கொண்டிருந்ததாக எண்ணிய பேருந்தில், தான் பதிவு செய்திருந்த சன்னலோர இருக்கையில் ஆயாசமாக அமர்ந்து கொண்டான் . நகரத்தில் மோதித்திரியும் காற்று... சன்னலோரத்தில் அமர்ந்திருந்தவனை அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருந்தது. நட்டு நாற்ப்பது நாட்களேயான நெற்பயிர், பரந்த வெளிக்காற்றை பருகிக்குடித்துக்கொண்டே ஓயாத ஒய்யார நடனம் புரிவதை போல் ஆடிக்கொண்டிருந்தது அவனது தலைமுடிகள்.

துரட்டியால் தட்டிவிட்ட தேனடையை சுற்றி பதற்றத்துடன் மொய்க்கும் தேனீக்களைப் போல விறுவிறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது நகரம். விறுவிறுப்பிலிருந்து மெல்ல வழுக்கி ஊரத்துவங்கிய பேருந்து சாலையோர காட்சிகளையெல்லாம் பின்புறமாக செறுகிக்கொண்டிருந்தது. வேகமாக புறந்தள்ளிபோய்க்கொண்டிருந்த சன்னலோர காட்சிகள் மெல்ல மெல்ல இவனை அடிமை படுத்திக்கொண்டிருந்தது .

“சார்.... உங்க டிக்கெட் குடுங்க.” என்ற நடத்துனரின் கேள்வி இவனது காதுகளுக்கு எட்டவில்லை . இவனது மூளை ஏதோ ஒரு குறுகிய குகைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. 

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் யாரோ ஒருவருடைய வயதுடன் ஒத்துப்போவதுமான வயதுடனும் , தோற்றத்துடனும் இருந்த ஒருவர் இவனது பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் . அவரது அகத்தோற்றத்தை போலவே புறத்தோற்றமும் அழகாய் இருந்தது . “தம்பி.... என்று தோளில் தட்டி டிக்கெட் கேட்கிறார் கண்டக்டர். குடுங்க” என்றார் .

நட்டநடுநிசியில் அதிபயங்கர கனவு கண்டு விழித்தவனைப்போல் திடுக்கிட்டு பின் சுதாரித்துக்கொண்டு. பேன்ட் பாக்கெட்டிலிருந்து தனது purse சிலிருந்த reservation டிக்கெட்டை எடுத்துக்கொடுத்து மாற்று டிக்கெட் பெற்றுக்கொண்டான் .

தோள்தட்டி எழுப்பிய பக்கத்து இருக்கை காரரை பார்த்து குழந்தையாய் சிரித்து தேங்க்ஸ் சார் என்றான் .

“இருக்கட்டும் தம்பி.... நீங்க எந்த ஊர் போரேல் தம்பி” 

தஞ்சாவூர் சார் என்றான். திரும்ப இவன் அவரை பார்த்து நீங்கள் எந்த ஊர் செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அவராகவே சொன்னார். நான் கும்பகோணத்தில் இறங்கிடுவேன் தம்பி என்று .மறுபடியும் சிரித்துக்கொண்டான் .

நகரத்தை கடந்து மெல்ல இருளுக்குள் புதைந்துகொண்டிருந்தது பேருந்து. சன்னலோரக்காட்சிகளையெல்லாம் இருள் மூடி மறைத்துக்கொண்டன. மின்மினிப்பூச்சிகள் மின்னி ஒளிப்பதை போல் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் இருட்டை ஊடுருவி மின்னிக்கொண்டிருந்தது வெளிச்சம் .

அயராத பணியினால் ஏற்ப்பட்ட சோர்வும் , உறக்கமும் இவனை அடிமை படுத்த , தென்றலின் தாலாட்டில், இரவின் மடியில் இவன் சொக்கி தற்காலிகமாய் செத்துப்போயிருந்தான் . இடையில் ஒரு சில இரவு நேரக்கடைகளில் பேருந்து நின்றது கூட தெரியாமல் தற்காலிக மரணம் உறங்காமல் உயிர்ப்புடன் இருந்திருந்தது . பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் இவனை தட்டி எழுப்பி தம்பி மணி 3 .30. இன்னும் பத்து நிமிடத்தில் கும்பகோணம் பேருந்து நிலையம் சென்று விடும் பேருந்து. நான் இறங்கி விடுவேன். நீங்களும் விழிக்கொள்ளுங்கள் என்றார் . பாதி பிறையாய் கண்களை திறந்து , வாயோரம் ஒழுகிக்கொண்டிருந்த உமிழ்நீரை வெட்கப்பட்டு துடித்தவாறே சரி சார் ரொம்ப தேங்க்ஸ் என்றான் .

அடுத்த ஒரு மணிநேரத்தில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் வீட்டு வாசலில் இறங்கிவிட்டு ஆட்டோவிற்கு பணம் கொடுத்து கொண்டு
இருக்கையில் . அவனது அம்மா ஆட்டோ சத்தம் கேட்டதும் லைட்டை போட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு கதவை திறந்து வாஞ்சையுடன் அழைத்து சென்றாள். 


மிச்சமிருந்த சோர்வையும் , உறக்கத்தையும் இருளுக்குள்ளேயே கரைத்துவிடும் பொருட்டு தனது அறைக்கு உறங்கசென்று விட்டான் . 

விடியலின் ஒலி, ஒளி அத்துனை சமிக்கைகளையும் அலட்சியப்படுத்திவிட்டு சிறு ,சிறு கனவுகளை சுமந்தபடி உறக்கத்தை நீட்டிக்கொண்டிருந்தான். அம்மாவின் அழைப்புக்குரலில் சுருண்டு , சுருட்டிக்கொண்டது உறக்கம் . டேய்... போயி குளிச்சுட்டு வாடா.... உனக்கு பிடிச்ச கறிக்குழம்பு வச்சுருக்கேன். தோசை ஊத்தி தாரேன்.

பிரஷ் பண்ணிட்டேம்மா... மொதல்ல ஒரு டீய போட்டுக்குடு. கொஞ்ச லேட்டா சாப்புர்றேன் .

அம்மா போட்டு வந்து கொடுத்த டீயை குடித்தபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாக காணப்பட்டான் .

முந்தைய இரவுப்பயணத்தின் போது தன்னுடைய பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்த வயதான தம்பதிகள் எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது இவனது செவித்துளைகளின் ஓரச்சுவருக்குள் படிந்திருந்தது .

அவர்கள் தங்களுடைய 32 வயது மகளுக்கு தொடர்ந்து திருமணம் தள்ளிபோய்க்கொண்டிருப்பதை பேசிக்கொண்டு வந்ததாக அவனுக்கு தெரிந்திருந்தது . மேலும் பரிகாரத்திற்காக வைதீஸ்வரன் கோவிலுக்கு வருபவர்களை போல் பேசிக்கொண்டிருந்தார்கள் . அவர்களது உரையாடல், அம்மிக்கல்லில் வைத்து குளவியின் ஏதோ ஒருமுனை தூக்கி லேசாக நசுக்கிய இஞ்சி விழுதை போல் நைந்து போயிருந்தது . 

டீ கப்பினை முத்தமிட்டுக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். முதிர்கன்னிகள் குறித்து கவிதை ஒன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.

டீ கப்பினை சமயலறையில் வைத்துவிட்டு தன் அம்மாவிடம், “ம்ம்மா நானா வந்து டிபன் கேட்க்குரப்ப குடு.... ஒரு கவித எழுத போறேன். நடுப்பரவந்து சாப்டு கீப்டுன்னு தொந்தரவு பண்ணாத” என்றான் கவியமுதன்.

வாசிகபாரதி: ஏண்டா ஒரு வழியா சாப்டு போய் எழுதேண்டா... எனக்கொரு வேல முடியும்ல .

கவியமுதன் : இல்லம்மா.... நல்ல மூட்ல இருக்கப்பவே எழுதிர்றேன் என்னோட இஷ்டத்துக்கு விட்ரும்மா.

வாசிகபாரதி: சரி சரி போய் எழுதுடா தொந்தரவு பன்னால ஒன்ன .

நன்றிம்மா.... என்றபடி தன் தாயின் வலது தோளில் தன்னுடைய வலது கையை போட்டு ,இடது கையால் அவளது தாடையை உருகிக்கொஞ்சிவிட்டு தன்னுடைய ரூமிற்கு சென்று கதவை தாழிட்டான். மேசையை ஒட்டிக்கிடந்த வயரால் பின்னப்பட்டிருந்த s டைப் சேரை இடது கையால் பின்புறம் இழுத்து அமர்ந்து கொண்டு மேசை மீதுள்ள டைரியை எடுத்து தன் சட்டைபாக்கெட்டிலுள்ள கருப்பு நிற பேனா மூடியை திறந்து “முதிர் கன்னிகள்” என்று தலைப்பிட்டான் .

தமிழை சுவாசித்த தம்பதிகளின் உதிரங்கள் உருவாக்கிய உயிர் என்பதால் வார்த்தைகள் வழுக்கி விழுவதில் தடையேதுமில்லாமல் விழுந்தது கவியமுதனுக்கு . 

விழுந்தவரிகளை பொருக்கி முடிந்து வார்த்தைகளாய் கோர்த்து பின் வாய்விட்டு வாசித்துப்பார்த்தான். வரிகளில் வலிகள் கூடியிருந்ததால் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு வார்த்தைகள் வரமறுத்து வாசிப்பை நிறுத்த கட்டாயப்பட்டுப்போகிறான் .

பெருக்கெடுத்திருந்த விழிக்குளம் இரண்டிலிருந்தும் இருதுளி நீர்கள் மட்டும் பூமி தேவியின் மடியில் சிந்திப்போனது.

சிறிதுநேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கவிதையின் கணம் சுமந்து கொண்டே , 
கவியமுதன் டிபன் குடும்மா.

வாசிகபாரதி: என்னடா அதுக்குள்ளே எழுதீட்டியா ? ஏண்டா மொகம் ஒரு மாதிரி இருக்கு?
என்று கேட்டுக்கொண்டே தோசையை வார்த்து தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள். 

சாப்பிட்டு முடித்ததும் கவிதையை அவளிடம் கொடுத்து வாசிக்கசொன்னான் . வாசித்து முடித்ததும் புள்நுனியிலிருந்து சிதறப்போகும் நீர்த்துளிபோல் அவளும் இருதுளிகள் கண்ணீரை கசியவிட்டு துடைத்தவாறே , நல்லா எழுதீருக்கடா... என்றாள். 

நல்ல அழுத்தமான கவிதையா இருக்குடா அப்படியே ஒன்னோட ப்ளாக் ளையும் , ஃபேஸ்புக் ளையும் போட்டு விடுடா.... எல்லோரும் படிக்கட்டும் என்றாள் .

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொல்லும் நிலை இன்று மாறி. இணையம் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டு வரியில் கவிதையோ, தத்துவமோ நாம் எதை சொன்னாலும் இந்த உலகில் இணைய இணைப்பு உள்ள எந்த மூலையிலும் ,யாரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இன்றைக்கு இணையத்தில் பலவகையான வசதிகள் உள்ளன . ஃபர்ஸ்ட் நேம் , செகண்ட் நேம் பாலினம் , பிறந்த தேதி , ஒரு மின்னஞ்சல் முகவரி... இது இருந்தால் போதும் பெருகிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஒன்றில் கணக்கு தொடங்கி விடலாம். அப்படி தொடங்கிவிட்டால், அமெரிக்க அதிபர் முதல், இந்த கதை எழுதிய நாள் வரை போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படாத ராஜபஷே வரையிலும். கோல்ஃப் விளையாட்டாளர் டைகர் வுட்ஸ் முதல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரை யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக ஆக்கிக்கொள்ளலாம். மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம் . 

பிளாக் இல் இது போன்று நண்பர்களை சேர்க்க முடியாது இதற்கென்று ஒரு விலாசம் நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்யவேண்டும். அந்த விலாசத்தை அட்ரஸ் பாரில் அடித்தால் நீங்கள் உங்கள் ப்ளாக் இல் எழுதி இருப்பதை எல்லோரும் பார்க்கலாம் . 
அதாம்மா பண்ணப்போறேன் என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய லேப்டாப்பை 
திறந்து எப்போதும் இரண்டு மூன்று முறைக்கு மேல் அழுத்தி சுவிட்ச்சான்
செய்வது போலவே சுவிட்ச்சான் செய்தான் . 

ஃபேஸ் புக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் கவியமுதனுக்கு ஏற்கனவே கணக்கும் , நிறைய நண்பர்களும் உண்டு .

தன்னுடைய கவிதையை ஃபேஸ்புக் குறிப்பில் பேஸ்ட் செய்தான். தன்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு முப்பது நபர்களுக்கு இணைப்பில் போட்டான் . இணைப்பில் போட்டதை பப்ளிஷ் செய்தான். 

செய்து முடித்துக்கொண்டிருந்த இடைவெளியில் இவனது செல் ஃபோன் , "கையில் மிதக்கும் கனவா நீ " என்ற பாடலை பாடியது. எடுத்துப்பார்த்தான் “ரொசாரியோ ஒ +” என்ற பெயர் ப்ளிங்கிக் கொண்டிருந்தது.

நண்பனின் அழைப்பு அது. அவன் பெயருக்கு பக்கத்தில் உள்ள இந்த “ஒ+” என்ற குறியீடு அவனது ரெத்த வகையை குறிப்பதாகும். கவியமுதனின் செல் ஃபோனில் அவனது தொடர்பாளர்களது பெயருக்கும் பக்கத்தில் அவரவர்களின் ரெத்தவகையை குறித்து வைத்துக்கொள்வது அவனது வழக்கம். தக்க சமயத்தில் அவர்களுக்கும், அல்லது வேறு யாருக்கேனும் உதவியாக இருக்கும் என்று இவ்வாறு குறித்து வைத்துக்கொள்வான். அழைப்பு மணி “கை கால் முளைத்த காற்றா நீ” பாடுவதற்குள் , 

கவியமுதன்: சொல்டா  எங்க இருக்க ? 

ரொசாரியோ: வீட்லடா..., நீ எங்கருக்க ? 

கவியமுதன்: நானும் வீட்ல தாண்டா.

ரொசாரியோ: சினிமா போவமா ?

கவியமுதன்: என்ன படம் ?

ரொசாரியோ: வா போய் பாக்கலாம். எது கிடைக்கிதோ போலாம். ரொம்ப போரா இருக்குடா .

கவியமுதன்: சேரி கெளம்பி வர்றியா ?

ரொசாரியோ: இன்னும் ஆஃப்ன்னவர்ல உங்க வீட்ல இருப்பேன்.

கவியமுதன்: சரி வா . 

அரைமணி நேரத்தில் வந்துநின்ற கருப்பு நிற டூவீலரில் பின்னால் ஏறிக்கொண்டான் கவியமுதன்.

ஆற்றுப்பாலம் தாண்டி சென்றது டூவீலர். நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள குறுகிற சந்துப்பாதைக்குள் நுழைந்தது. அதனுள்ளே தான் மிகப்பெரிய இடத்தில் ராஜராஜன் தியேட்டர். மணிரத்னம் இயக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” பட போஸ்டரில் மாதவன் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தாள் பார்த்திபன் சீதா தம்பதியர் பெற்றெடுத்திருந்த குட்டி தேவதை “கீர்த்தனா” . ரூபாய் நூற்றி அறுபதிற்க்கு “சலுகை” விலையில் இரண்டு ப்ளாக் டிக்கெட் கிடைத்தது . 

படத்தின் இடைவெளியில் கூட்டத்தின் பெரும்பாலோனோர் விரல் இடுக்கிலும் வித விதமான கம்பெனிகளின் சிகரெட் தற்காலிகமாக தன்னையும் , பிடித்திருப்பவனை சமயம் பார்த்து எரிக்கவும் கங்கிக்கொண்டிருந்தது. இவர்களும் தன் பங்கிற்கு ஆளுக்கொரு சிகரெட் சாம்பலை தட்டிக்கொண்டிருந்தார்கள் .கவியமுதன் தட்டும் சிகரெட் சாம்பல் திண்டு திண்டுகளாக கீழே விழுந்து சிதறுவதைப்போல் அவனது மனதும் விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. படத்தில் ஈழத்தமிழர்கள் படும் அவஸ்தையை தத்ரூபமாக படமாக்கியிருந்தார் மணிரத்னம்.

நல்லதொரு விடுமுறை பொழுதை அர்த்தப்படுத்தியதாக எண்ணினார்கள் இருவரும் .

அப்படத்தில் வரும் பல காட்சிகள் மனதை கணக்கசெய்தாலும் "விடைகொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே" என்ற இந்த பாடல் வரிகள் தினமும் தன்னை கொத்திக் கொத்தித்திண்ணாமல் போகப்போவதில்லை என்றும், இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனது கனவில் வந்து போகாமல் ஒரு இரவு கூட விடியப்போவதே இல்லை என்றும் நினைத்துக்கொண்டான் .

இரண்டு நாள் விடுமுறைக்காக தான் பணிபுரிந்த ஊரிலிருந்து உறவினர்கள் வசிக்கும் தன் சொந்த ஊருக்கு தான் பயணித்ததையும் , இந்த பாடல் காட்சிகளில் தம் சொந்த மண்ணை விட்டு பிரிந்து புலம்பெயர்ந்து போகும் மக்களின் பயணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டான்.

மாலைப்பொழுதுகளை எல்லாம் நண்பருடன் கடத்தியாகிவிட்டது. இரவு டிபன் கூட ஒரு நல்ல ஹோட்டல் இல் முடித்து வீடு திரும்பியாகிவிட்டது .

வீட்டு வாசலில் வந்து நின்ற டூ வீலரில் இருந்து இறங்கி.... வருங்கால தலைமுறையினருக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஓர் ஆய்வில் கடந்த ஒரு மாதங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தன் தந்தையிடம், ஹாய் அப்பா என்றான். “ஹாய்” என்ற பதம் இவனுக்கு சாஃப்ட்வேர் துறை கொடுத்திருந்த சாபமாக எண்ணிக்கொண்டான்.

அரிமாவளவன்: ம்ம், வாடா எங்க போயிட்டு வர்ற ?

கவியமுதன்: சினிமாவுக்குப்பா..

ம்ம் சரி சரி என்று தலையாட்டிக்கொண்டு தன்னுடைய வேலையில் மூழ்கிகொண்டார் . இவரது கல்விப்பணி விளம்பரமற்றதாக , சுயநலமற்றதாக இருந்திருந்தது .

இவன் இந்த முறை வீட்டில் தங்கியிருந்த இரண்டு நாட்களிலும் தன் அப்பா தன்னுடன் சரியாக பேசவில்லை என்று எண்ணிக்கொண்டான் . 

தம்பி அமலன் தான் படித்திருந்த படிப்பிற்கு வேலை தேடும் பொருட்டு ,சென்னையில் உள்ள கம்பெனிகளின் விபரங்களை சேகரித்து கொண்டிருக்கையில் ,

ஒல்லியான தேகம் கொண்டவர் ஒருவர் சார் என்று அழைத்தவாறே தயங்கி வாசலில் நின்றிருந்தார் .வாங்க மாரியப்பன் என்று அழைத்து வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார் கவியமுதனின் அப்பா .அவர்களின் பேச்சில் இருந்து தனக்கு கல்யாண பேச்சு தொடங்கியிருப்பதாக தெரிந்திருந்தது கவியமுதனுக்கு .

வந்திருந்தவர் ஒரு திருமண தரகர் என்பதை புரிந்து கொண்டான் .

சரி நீ சாப்ட வாடா என்றாள் அம்மா .

சாப்டேம்மா ஹோடெல்ல.

ஏண்டா ஊர்ல இருக்கப்பவாவது வீட்ல சாப்டாம இப்டி பண்ற? என்றாள்.

கோவிச்சுக்காதம்மா தூக்கம் வருது போயி தூங்குறேன்.

என்று விடை பெற்றுக்கொள்கிறான் .

சுவற்றுக்கோழியின் இடையறாத தாலாட்டில் உறங்கிப்போயிருந்தான் கவியமுதன். உறக்கத்தின் ஊடே அவன் கண்டிருந்த ஏதேதோ கனவுகளை எல்லாம் விடிந்ததும் தொலைத்து விட்டிருந்தான் . அன்றிரவு சென்னை செல்வதற்கு 10 .30 பேருந்திற்கு முன்பதிவு டிக்கெட் பெற்றிருந்தான் . அதற்காக ஆயத்தமாகிக்கொண்டே அன்றைய பகல் பொழுதுகளை உடைத்தெறிந்து கொண்டிருந்தான் .

குடும்பத்தாருடன் கழித்த பொழுதுகளை நினைவோடையில் மிதக்கவிட்டபடி சென்னையில் கரை ஏறிக்கொண்டான் . மறுபடியும் அவன் பந்தயக்குதிரையில் பயணித்தாகவேண்டும் .

அலுவலக கணினிதிரையின் மூலம் இரவிற்கான உறக்கத்தினை சம்பாதித்து வந்தவனுக்கு தன் அறையில் உள்ள கணினியை திறப்பதில் அலாதிப்பிரியமின்மயாயிருந்தாலும் நித்தம் அவனது நித்திரையை கொத்தித்தின்று கொண்டிருந்த அந்த பாடல் வரிகளும், காட்சிகளும் .அன்று ஏனோ அகோரப்பசியால் ஒரேயடியாய் கொத்தி விழுங்கிக்கொண்டிருந்தது . சரி... இணையத்தை சற்று நேரம் திறந்து பொழுதை கழிப்போம் என்றெண்ணினான். தான் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதிய “முதிர்கன்னிகள்” குறித்த கவிதைக்கு யார் யார் என்ன பதில் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக முகவரிப்பெட்டிக்குள்ளும் , கடவுச்சொல் பெட்டிக்குள்ளும் பத்து விரல்களின் நடன ரேகையை பதித்து திறந்து கொண்டான் .

முகமறியாத, தகவல் அறிந்த நண்பர்களின் நட்பு கேட்பு , உள்ளீட்டு செய்தியொன்று , அறிவுறுத்தல் செய்தியென்று எல்லாம் சிகப்பு நிறத்தில் நம்பர்கள் பதித்த அட்டையை தூக்கிக்கொண்டு நின்றது . யாரோ நட்பு வேண்டி விண்ணப்பித்திருக்கின்றார்கள் முதலில் அவர்களை நட்பில் இணைத்துக்கொள்ளலாம் என்று அவரது முகவரியையும் , புகைப்படத்தையும் பார்த்தான் கவியமுதன். தான் ஒரு பெண் என்ற தகவலும் தன்னுடைய சொந்த நாடு ஸ்ரீலங்கா, ஊர் ஜப்ஃனா என்று மட்டும் இருந்தது. மற்ற தகவல்கள் இல்லாததால் பிறகு எப்போதாவது நட்பில் இணைத்துக்கொள்வோம் என்று உள்ளீட்டு குறுஞ்செய்தியின் பக்கம் பார்வையை விட்டெறிந்து கிளிக்கினான்.... நட்பு அழைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த அதே ஜப்ஃனா கேர்ள், ஹாய் ... என் பெயர் ஆண்டாள்.  உங்கள் முதிர் கண்ணிகள் கவிதை வாசித்தேன் அருமை என்று ஆங்கில எழுத்துக்களை பயன் படுத்தி தமிழில் படித்து உச்சரிக்கும் படியாக எழுதியிருந்தாள். 

என்னதான் பொழுதனைக்கும் கணினியில் பணிபுரிபவனாக இருந்தாலும் வேற்று நாட்டவர் ஒருவர் தமிழில் எழுதி பேசியதை கவியமுதன் முதல்முதலாக இப்பொழுதுதான் பார்க்கிறான் . பதில் மரியாதைக்காய் மட்டும் நன்றி என்றொரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த ஈழ தமிழச்சியை தன்னுடைய நட்பில் இணைத்துக்கொண்டான் . முதிர்கன்னிகள் குறித்த பதிவினை திறந்து பார்த்துக்கொண்டிருந்தான்... அந்த பதிவிற்கு பின்னூட்டம் பெரும் ஆறுதலை தந்தது அழுத்தமான , நல்ல பதிவு என்று பாராட்டிவிட்டு , தங்களுக்கு பிடித்த , தங்களை உறையச்செய்த வரிகளாக கீழ்க்கண்ட வரிகளைத்தான் குறிப்பிட்டிருந்தார்கள் . 

//மனமேடை ஏறுவதற்கான

ஒத்திகை பார்த்தே

ஓய்ந்து போனேன் // 

கவியமுதனுக்கும் வலித்த வரிகள் இதுவாகத்தான் இருந்திருந்தது . 

சற்று நேரத்தில் மற்றுமொரு குறுஞ்செய்தி வந்திருப்பதாக ஒற்றை எண் சிகப்பாக எரிந்தது , பிரித்துப்பார்த்ததும் அதே ஜப்ஃனா கேர்ள் , அனைவருக்கும் பிடித்திருந்த , வலித்திருந்த, மேல் குறிப்பிட்ட அதே வரிகள் தனக்கும் பிடித்திருக்கிறது என்று அனுப்பியிருந்தாள். 
மறுபடியும் பதிலுக்காய் ஒ...... , அப்படியா ? நன்றி. என்று அனுப்பினான் கவியமுதன் .

அடுத்ததாக எப்படியும் ஒரு செய்தி வரும் என்று எதிர் பார்த்து பார்வையை செய்திப்பெட்டியின் மேலேயே வைத்து காத்திருந்தான். அவனது காத்திருப்பு வீண் போகவில்லை. அடுத்த செய்தியையும் அவளே அனுப்பியிருந்தாள்.

தான் கொழும்புவில் இருக்கும் தன்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருப்பதாகவும், நாளை ஜப்ஃனா போய்விடுவேன் அங்கு போய் பேசுகிறேன்.

டேக் கேர் என்று முடித்திருந்தாள்.

பதிலுக்கு – bye , டேக் கேர் என்ற
செய்தியை அனுப்பிவிட்டு தனது கணினியை மூடி வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டான்., ஒரு வார காலத்தை எப்படிக் கடத்தப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. இந்த மலைப்பு அந்த இலங்கை தமிழச்சி ஏற்படுத்தியிருந்ததானது. 

தினமும் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து பார்ப்பதை இப்போது கொஞ்சம் ஆர்வமாக செய்யத்துவங்கி இருந்தான்.

வாரத்திற்கு ஏழு நாட்கள் என்று நிர்ணயித்தவன் எவன் ? என்று தினமும் , அவ்வப்போது திட்டிக்கொண்டான். ஏழு நாட்களைக்கடந்தும் அவள் இணையத்திற்கு வராததால் வாரத்தின் நாட்கள் ஏழு என்பதை இப்பொழுது அதிகப்படுத்திவிட்டாகளோ ? என்றளவில் லேசாக புலம்புபவனாகியிருந்தான். இந்த எதிர்பார்ப்புக்கும் , புலம்பலுக்கும் எது காரணியாக இருக்கும் என்று அவனால் அறிந்திருக்க முடியவில்லை . அநேகமாக அது காதல் என்ற உணர்வின் சீண்டலாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். இந்த உணர்வு தன்னை முதன்முதலாக அவளால் சீண்டிவிடப்படுவதாக உணர்ந்தான்.

ஒருவாரம் கழித்து வருவதாக சொல்லியிருன்தவள் பதினோரு நாட்கள் கழித்து இணையம் திறந்து ஒரு செய்தி அனுப்பியிருந்தாள்.

“ஹாய் சாரி போன இடத்தில் கொஞ்சம் வேலை , அதனால் தான் வர இயலவில்லை” தேடிக்கொண்டிருந்தீர்களோ..... ரொம்ப ?” இப்படியாக இருந்தது அந்த செய்தி. அவள் பேசும் அழகில் வாஞ்சை இருந்ததாக எண்ணிக்கொண்டான்.

அலுவலகத்தின் கணினியில் வேலை பார்த்துக்கொண்டே அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கத்தினை திறந்து பார்த்து அவளிடமிருந்து செய்தி ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். இவனுக்கான அலுவலகப்பணி நேரம் முடியப்போவதாக கடிகாரமுள் குத்திக் காட்டிக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது.

கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தினை பார்த்திருந்த போதுதான் மேற்க்குறிப்பிட்டிருந்த அந்த செய்தியை அவன் பார்த்தான் . அவளிடமிருந்து செய்தி வந்திருந்து மூன்று நிமிடங்கள் ஆகிவிட்டதாக இருந்தது . அலுவலக நேரம் இவ்வளவு சீக்கிரம் நகர்ந்து போயிருக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டான் . அவளது செய்தியை பார்ப்பதற்கும் முன் அவன் அப்படி நினைத்திருக்கவில்லை. 

ஓ...... அப்படியா ...சரி சரி நான் இப்போது அலுவலகத்தில் இருக்கிறேன். அலுவலக வேலை நேரமும் எனக்கு முடிந்துவிட்டது . தொடர்ந்து இப்பொழுது என்னால் பேச இயலாது. எனது அறைக்கு சென்றதும் ஆன்லைன் வருகிறேன். என்ற செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காய் காத்திருந்தான் . சிறிதொரு வினாடிகளுக்குள் அவளும் “oki . டேக் கேர் . ஆன்லைன் வந்ததும் மெசேஜ் பண்ணுங்கோ”. என்று செய்தி அனுப்பிவிட்டு சென்றுவிட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி தன்னுடைய பைக் சாவியை எடுத்து பைக்கை திறந்து பார்க்கிறான். அது திறக்கமுடியாமல் போகிறது . எரிச்சலடைகிறான் . தன் அலுவலக சக ஊழியரான ராஜாராமன், “என்னப்பா ... உன்னோட பைக் சாவியை வைத்து என்னோட பைக்க திறக்கற ? என்னாச்சி உனக்கு ?” என்றதும்... அவரிடம் ஒரு சாரி சொல்லிவிட்டு கிளம்பிப் போகிறான்.

நாட்களின் நீட்சி இவர்களின் பேச்சடங்கியதாய் கடந்து போயின. இருவரின் எண்ணமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருக்க வேண்டும் . கடல் கடந்த இவர்களது பேச்சுவார்த்தைகள் காதல் என்னும் உணர்வுப்பூவை மலரச்செய்திருந்தது. 

இவர்கள் பேசிக்கொண்டிருந்த பிரிதொருநாளில் ஆண்டாள், “எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை . நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்” இப்படி ஒரு செய்தியை அனுப்பியிருந்தாள். 

அவள் அனுப்பியிருந்த இந்த செய்திக்கு... அவளுக்கு கவியமுதனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இணையத்தின் மூலம் காதலித்து , மனதை பறிகொடுத்து எமார்ந்துவிட்டோமோ எண்றெண்ணியவள், தினமும், அடிக்கடி செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். அவனது அலைபேசிக்கு தொடர்புகொண்டும் அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதான குரலையே அதிரச்செய்தது.

இவள் அனுப்பிக் கொண்டிருக்கும் செய்திக்கு பதில் வந்ததா ? அழைத்துக் கலைத்துப்போன அலைபேசி மணி அடித்ததா ?

கவியமுதன் என்னவானான் ? அதன் பின்  ஆண்டாள் என்னவானாள் ? இவர்களது காதல் என்னவானது ? கவியமுதன் , ஆண்டாளை ஏமாற்ற நினைத்தானா ? ஆண்டாள் தேடிக்கொண்டே இருந்தாளா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா ? 

இதில் எது வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் .

இதிலுள்ள ஏதும் நிகழாமலும் இருந்திருக்கலாம் .

எங்கும் நிகழாத ஏதேனும் தியாகம் கூட இக்காதலில் நிகழ்ந்திருக்கலாம் . 

(மனித உணர்வுகளை வருடும் வகையில் , மென்மையான, இந்த காதல் கதையின் முடிவினை திரையில் காணும் பொருட்டு, இக்கதைக்கான முழுத்திரைக்கதை வடிவம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையினை திரையிட விரும்பும் தயாரிப்பாளர்கள் என்னை அணுகலாம்.

வசனம், பாடல்கள் உட்பட தயார்நிலையில் உள்ளது.)



வெறும்பயல்

வெறும்பயல்


மனிதக் கூட்டங்களுக்குள் விரக்தியின் மையப்புள்ளியாக மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஊர்ந்து சென்று, கும்பகோணம் செல்லும் பேருந்தில் இடதுபுற சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான் சோலையப்பன்.
நடத்துனரின் தடித்த குரலுக்கு மட்டும் அவன் செவி சாய்த்து கும்பகோணம் செல்வதற்கான டிக்கெட்டை பெற்றுக்கொண்டான்.

அவன் பிடிக்காமல் உதறித்தள்ளி வந்த வேலைகளுள் எத்தனையாவது வேலை இது என்று அவனுக்கே கூட தெரிந்திருக்காது. மூன்று மாதங்களாக பார்த்துவந்த மருந்து விற்பனை பிரதிநிதி வேலையையும் உதறிவிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. மனசுக்கு புடிக்காத வேலையில இருக்கதும் மனசுக்கு புடிக்காத மனைவியோட குடும்பம் நடத்துறதும் ஒண்ணுன்னு சுயம்புவாக பேசினான் என்னிடம்.

கட்டாயமாக படிக்கவைக்கப்பட்ட கல்லூரி படிப்பு சோலையப்பனுக்கு எந்தவிதத்திலும் பயன்படவில்லை. தன் மனதுக்கு பிடிக்காத வேலைக்குச் செல்வதற்கான ஒரு தகுதிச் சான்றாகவே அது அவனுக்கு பயன்பட்டது.

கும்பகோணத்தில் இறங்கி அவன் நேராக வீட்டிற்கு போகப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் நினைத்தது போலவே "டை" யும் "பை" யுமாக அவன் போய்க் கொண்டிருந்த இடம் நூலகமாக இருந்தது. "ஏண்டா... வீட்டுக்கு போயி bag எல்லாம் வச்சுட்டு டிரஸ் மாத்திட்டு போயேண்டா..." என்றேன். சிகரெட்டை ஊதியவாறு என்னை அகங்காரமாய் திரும்பிப்பார்த்து ஒரு முறை முறைத்தான். அவனின் அந்த முறைப்புக்கு எல்லாம் எனக்குத்தெரியும். அடங்கு... என்பது அர்த்தம்.

அவனது அப்பா அந்த நூலகத்தின் முன்னாள் உறுப்பினர். அவரது உறுப்பினர் அட்டையை இவன் புதுப்பித்துக் கொண்டே இருந்தான். நாங்களெல்லாம் கோவில், குளம், ஆறு, மைதானம், சினிமா என்று ஊர்சுற்றிக் கொண்டிருந்த நேரமெல்லாம் அவன் மட்டும் நூலகத்தில் கிடையாய் கிடப்பான். புத்தகப்பிரியன். விடுமுறை நாட்களில் நூலகர் வந்து திறக்கும் முன்னே இவன் அங்கு சென்று அமர்ந்திருப்பான். ஒரு சில நேரங்களில் மதிய சாப்பாட்டுக்கே வீடு வரமாட்டான். ஒரு சில நாட்களில் நூலகர், "சோலையப்பா... பூட்ர நேரம் வந்துருச்சி..." என்று கூட இவனை வெளியில் தள்ளியிருக்கிறார். எந்த நூலகர் வந்தாலும் ஒருவாரத்தில் இவனது பெயர் பரிச்சயப்பட்டுவிடும்.

வீட்டிற்கு வந்தபிறகும் தான் எடுத்துவந்திருந்த புத்தகங்களை படிக்கவும், அவ்வப்போது ஏதோ எழுதுவதுமாவே அவனது பொழுதுகளை கரைப்பான்.

எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற அவனது லட்சியத்திற்கு யாரும் உடன்படவில்லை. உடன்படவில்லை என்றால் ஊக்கப்படுத்தவில்லை. ஒரு முறை பிரபல வார இதழில் தனது கதை பிரசுரம் ஆகியிருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் சென்று காண்பித்தான். அதற்கு வீட்டில் உள்ளவர்கள், "ஒழுங்கா எங்கயாவது வேலைக்கு போயி சம்பாதிக்கிற வழிய பாரு... இப்புடி "வெறும்பயலா" சுத்தாத..." என்றார்கள்.

அப்போதிலிருந்து தான் இரண்டும் கெட்டான் மனநிலைக்கு போனது போன்ற விரக்தியில் எங்கேயாவது வேலைக்கு போவது. அவ்வப்போது எதோ எழுதுவதுமாக இருந்தான். எப்போதாவது செலவுக்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கேட்பான். அவன் கேட்கும் தொகை சிறியதாகவே இருக்கும். எனக்கும் கொடுப்பதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் இருந்தது.

ஒரு மார்கழி மாத கடும்பனி இரவில் சோலையப்பனிடமிருந்து எனது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. தாங்கமுடியாத இருமலுடன் என்னை உடனே தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். அவசரமாக கிளம்பிசென்றேன். அவன் தன் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மாடியில் உள்ள ஒரு அறையில் தான் தங்கியிருந்தான்.

அந்த நேரத்தில் நான் சென்றதும் அவனது வீட்டில் உள்ளவர்களும் மாடி அறைக்கு வந்தனர். கொஞ்சம் மூச்சிவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். உடன் மருத்துவமனை அழைத்துச்செல்ல

ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தார் அவனது அப்பா. சற்று சுதாரித்து , சிரமப்பட்டு எழுந்து கொண்டவன் தனது ஒரு பெட்டியிலுள்ள மொத்தமான நோட் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தான். அந்த நோட்டின் முதல் பக்கத்திலேயே எழுதமுடியாமல் கிறுக்கலாக ஒரு பதிப்பகத்தின் பெயரை எழுதினான்.

அதில் இந்த நோட்டை கொடுக்குமாறு சொல்லிக்கொண்டிருந்தபோது. ஆட்டோ வந்ததும் மருத்துவமனைக்கு பறந்தது ஆட்டோ.

அதிக புகைப் பழக்கத்தினால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான சோலையப்பன், தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஆறுமாதங்கள் கழித்து ஒரு நாள் காலையில் சோலையப்பன் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அந்த மருத்துவமனையின் டிவி செய்தியில்,

கும்பகோணத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் "வெறும்பயல்" என்ற புனைபெயரில் எழுதி வெளிவந்திருக்கும் "மனித(ரில்)க் கழிவுகளா நாங்கள்" என்ற துப்புரவு தொழிலாளிகளின் வாழ்வியல் குறித்த நாவல் சாகித்ய அகாடமி

விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியை சொன்னதும்.

எந்தவித மகிழ்ச்சியையும் காட்டிக்கொள்ளமுடியாத சோலையப்பன் செய்தியை காதில் வாங்கியவனாய் இருமிக்கொண்டே இருந்தான்.

அவனதுஅம்மாவும்அப்பாவும்,அந்த செய்தியை காதில் வாங்கியவாறு தன் மகனின் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

தன் அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் வெறித்துப் பார்த்த சோலையப்பனின் பார்வை, நீங்கள் பெற்றெடுத்த நான் வெறும்பயல் இல்லை என்பதை அவர்களுக்குள் குத்தியது.

சோலையப்பன் என்ற வெறும்பயலின் ஆன்மா அவனை விட்டு பிரிந்து கொண்டிருந்தது.