Friday, October 25, 2013

தண்ணீர் தண்ணீர்

கண்ணான பூமகனே


கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர்

ஆறாகப் பெருகி வந்து

தொட்டில் நனைக்கும் வரை

...உன் தூக்கம் கலைக்கும் வரை

கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே



ஊத்து மழை தண்ணீரே

என் உள்ளங்கை சர்க்கரையே

நீ நான் பெத்த தங்கரதம்

இடுப்பில் உள்ள நந்தவனம்

"காயப்பட்ட மாமன் இன்று

கண்ணுறக்கம் கொள்ளவில்ல

சோகப்பட்ட மக்களுக்கு

சோறு தண்ணி செல்லவில்ல

ஏகப்பட்ட மேகம் உண்டு

மழை பொழிய உள்ளமில்ல."



கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே



கால் மொளைச்ச மல்லிகையே

நான் கண்டெடுத்த ரோசாவே

நீ தேன் வெச்ச அத்திப்பழம்

முத்தம் தரும் முத்துச்சரம்

"தண்ணி தந்த மேகம் இன்று

ரத்தத் துளி சிந்துதடா

காத்திருந்த பானைக்குள்ளே

கண்ணீர் துளி பொங்குதடா

வீட்டு விளக்கெரிவதற்கு

கண்ணே எண்ணை இல்லையடா."



கண்ணான பூமகனே

கண்ணுறங்கு சூரியனே.

No comments:

Post a Comment