Saturday, December 7, 2013

தரப்படுத்திக் கொள்ளும் கலையறிதல்

உன் இருப்புகளை யெல்லாம் கட்டிக்கொண்டு
பயணக் குதிரையில் ஏறிவிட்டாய்.

ஆசீர்வதிக்கப்பட்ட இறுமாப்பில்
உன் பயணத்தின் மீது உனக்குமே நம்பிக்கையிருக்கிறது.

இடையில் பின்னப்படும்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிய
கூர்மழுங்கா கத்தியொன்றையும்
தாங்கியிருக்கிறது உன் இடுப்பு.

வேகம் குறையாமல்
சீராய் பாய்ந்து தாக்கும்
துப்பாக்கி ரவைகள் பற்றி
எந்த முன்னேற்பாடுகளும்
உனக்குள் இல்லை.

உன் பாதைகளில் பதிக்கப் பட்டிருக்கும்
கண்ணிவெடிகளை மோப்பம் பிடிக்கும் ஆற்றல்
உன் குதிரையிடம் இல்லை.

உன் இருப்புகளை அவிழ்த்துவிடும்
தருணங்களிலெல்லாம்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிந்து
உன் இருப்பின் எடை கூட்டிக் கொள்கிறாய்.

உன் இடுப்பில் தொங்கும்
கத்தியின் முனை மழுங்கிவிட்டதாக
எண்ணிக் கொண்டிருக்கும்போதே
உன் இருப்பின் கணம் கூடிவிட்டதாக
உணர்கிறாய்.

சுமந்துபோக குதிரை இருக்கிறது என்றபோதிலும்
துப்பாக்கி ரவைகளைப் பற்றியும்
கண்ணிவெடிகள் பற்றியும்
சிந்திக்கத் துவங்கியிருக்கிறாய்.

No comments:

Post a Comment